புதன், 25 டிசம்பர், 2013

நேசம்

திரைகூத்து பத்திரிகையில் இம்மாத வெளியீடாக எனது சிறுகதை, "நேசம்" வெளியிட்ட திரைகூத்து இதழுக்கும் திரு.ரஹீம் அவர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி...








                   
                      அந்த நிசப்தமான நள்ளிருளில் பிரியா  கடிகாரதையே  வெறித்து பார்த்துக் கொண்டிருந்தாள்.பிரிந்திருந்த காதலர்கலான கடிகார முட்கள் இரண்டும் ஒன்றாக இணைந்து முத்தமிட்டு சத்தமாக நேரம் பன்னிரெண்டு ஆகிவிட்டதை சுட்டிக்  காட்டியது.

சென்ற வருடம் இதே நேரம் அவள் ஆருயிர் காதலன் ரவி அலைபேசியில் பிறந்த நாள் வாழ்த்து மழை பொழிந்தது நினைவிற்கு வந்து அவள் கன்னங்களை நனைத்தது அவளை அறியாமல் பெருகிய கண்ணீர். வாழ்த்து சொல்ல விழித்திருந்த நண்பர்களால் அலைபேசி ஓயாமல் அலறிக் கொண்டிருந்தது. எடுத்து பேச மனமில்லாமல் அதை சைலெண்ட் மோடில் போட்டு படுக்கையில் சாய்ந்தாள். கவலை நிறைந்த மனம் தூங்காமல் அடம் பிடித்தது. சென்ற ஆண்டு அவனுடன் சேர்ந்து கொண்டாடிய அந்த பிறந்த நாள் நினைவுகள் மனக் கண்முன் வந்து வட்டமிட்டன.அந்த நினைவுகளை அசை போட்டுக் கொண்டே  எப்பொழுது தூங்கினாலோ அவளுக்கே நினைவில்லை.
கண் விழித்ததும் மீண்டும் அதே நினைவுகள் வந்து ஒட்டிக் கொண்டன. காலண்டரில்  தேதி  11-12-13 எனவும் கடிகாரத்தில் காலை 3.00 மணி எனவும்  காட்டியது. எத்தனை மகிழ்ச்சிகரமான நாள் இது. பாரதியார்  பிறந்த நாளில் தானும் பிறந்ததை எண்ணி எவ்வளவு மகிழ்ந்திருப்பாள்.இப்படி ஒரு அழகான நாள் எத்தனை பேருக்கு பிறந்த நாளாக அமைய முடியும். இந்த நாளை எப்படியெல்லாம் கொண்டாடலாம் என்று சென்ற வருடத்திலிருந்து திட்டமிட்டிருந்தாள்.  ஆனால் அதை கொண்டாடும் மனநிலையில் அவள் இல்லை அந்த சந்தோஷமும்  அவள் முகத்தில் இல்லை. அவள் உயிருக்கு உயிராக நேசித்த அவனும் இன்று அவள் அருகில் இல்லை.அவன் எங்கு சென்றானோ?எப்பொழுது வருவானோ?யாருக்கும் தெரியாது. அவன் பிரிந்து சென்றதில் இருந்து அவள் இப்படி நடை பிணமாகி விட்டாள் அலைபேசி வாழ்த்துமொழி குறுஞ்செய்திகளால்  நிரம்பி வழிந்திருந்தது. அவனை தினமும் தேடி அலைவதே அவளது வேலையாக இருந்தது.

கண்களை கசக்கி  வெளியில் வந்து பார்த்தால் வாசல்கள் எல்லாம் குளித்து விட்டு வண்ண வண்ண பூ கோலம் அணிய தயாராகிக் கொண்டிருந்தன. இவளும் குளித்து "இறைவா எங்கிருந்தாலும் என் ரவி இன்று என்னை பார்க்க வரணும்" என்று வேண்டிக் கொண்டு  அந்த மார்கழி பனியில் தனது ஸ்கூட்டியை கிக்கினாள். தெருவெல்லாம் வண்ண கோலங்கள் கம்பளம் விரித்து வாழ்த்து சொல்லி வரவேற்றன.

அவள் எங்கு செல்கிறோம்,எதற்காக செல்கிறோம் என்று தெரியாமல் அவன் நினைவுகளை சுமந்தபடி காற்றின் போக்கில் போய்க் கொண்டிருந்தாள்.எதிரில் வேகமாக வந்த வாகனம் மோதியதில் ஒருகணம் நிலைகுலைந்து நடுரோட்டில் விழுந்தாள்.

"அம்மா "  என்று அலறி சுதாரித்துக் கொண்டு  எழுந்திரிக்க முயலுகயில் அவன் கை கொடுத்து தூக்கி விட்டான்.  தூசி  தட்டிக் கொண்டே தூக்கி விட்ட அவனை நன்றியுடன் பார்த்த அவள் பேச முடியாமல் ஊமையாகி நின்றாள்.அவள் கண்களை அவளாலையே  நம்ப முடிய வில்லை.இது நிஜம் தானா என்று அவள் யோசித்துக் கொண்டிருக்கும் போதே அவன் அவளை தன்னருகில் இழுத்து அவள் காதுக்குள் ஹப்பி பர்த்டே ஹனி " என்று கிசுகிசுத்தான்.

பூரித்து போய் அவன் மார்புக்குள் முகம் புதைத்து  அவனை இறுக அனைத்துக் கொண்டாள்,விட்டு விட்டால் மீண்டும் எங்கே காணாமல் போய் விடுவனோ என்கிற பயம் அவளுக்கு. அந்த அரவணைப்பு அவளுக்கு எல்லையில்லா சந்தோசத்தை கொடுத்தது. அவள் கூந்தலை இதமாக வருடிய படி அவளை அருகில் இருந்த பார்க்கிற்கு அழைத்து சென்று அங்கிருந்த ஒரு  பெஞ்சில்  அமர்ந்தார்கள்.

 "ரவி"  என்று அவள் ஏதோ சொல்ல முயல  அதற்குள்  "ஷ்ஷ்ஷ்" என்று அவள் உதடுகளில் விரல் வைத்து  எதுவும் பேச வேண்டாம்  என்றான். அவள் பூ போன்ற முகத்தை தன் கைகளுக்குள் அள்ளி சிவந்திருந்த அவள் உதடுகளை தன் உதடுகளால் ஒற்றினான்.விழிகளை மூடி அந்த முத்தத்தை முழுமையாக ரசித்தாள். அவன் பிரிவின் தாக்கம் சோர்ந்து போன அவள் உடலில் தெரிந்தது. தூக்கமற்ற வறண்ட அவள் கண்கள்  அவளுக்கு அவன் மேல் இருந்த காதலை சொல்லியது.  கடந்த வருடம் இதே நாளில் அவளை விட்டு காணாமல் போன அவன் இன்று இப்படி திரும்பி வருவான் என்று அவளுக்கு தெரியாது. எது எப்படியோ அவனது அருகாமை அவளுக்கு பெரும் மகிழ்ச்சியை தந்தது.

அந்த பனி மூடிய காலை பொழுதில் சூரியனும் மேக போர்வையிலிருந்து வெளிவர தயங்கும் நேரத்தில் அவனும் அவளும் மட்டும் இப்படி அன்பில் உறைந்து கிடப்பது சுகமாக இருந்தது.

மரத்தில் இரண்டு காகங்கள் அவர்கள் இருப்பதை கூட பொருட்படுத்தாமல் காதல் செய்துக் கொண்டிருந்தன. அவற்றை பார்த்து அவன் புன்னகைக்க அவள் வெட்கத்தில் அவன் தோளில் சாய்ந்துக் கொண்டாள் .அவன் அவளை அணைத்துக் கொண்டு " நீ ரொம்ப அழகாய் இருக்கிறாய் " என்றான். வெட்கத்தில் முகம் சிவந்தாள்.

" உன்னை எவ்வளவு மிஸ் பண்ணினேன் தெரியுமா?" என்றாள். அவள் கண்களில் துளிர் விட்ட கண்ணீரை அவன் விரல்களால் துடைத்து அவள் நெற்றியில் முத்தமிட்டு .

 "இது நீ சந்தோசமாக இருக்க வேண்டிய நாள்.இப்படி அழலாமா?' என்றான்.

"அப்போ நீ செய்தது மட்டும்  சரியா?" எதிர் கேள்வி கேட்டாள்.

"இனி அப்படி செய்ய மாட்டேன்" என்றான்

"இனி எப்பவும் என் கூடவே இருப்பியா ?" குழந்தைத்தனமாக கேட்டாள்.

"ம்ம்ம்" என்று தலையசைத்தான்.

"நீ இப்படி சொல்லாமல் கொள்ளாமல் என்னை விட்டு பிரிந்து  செல்வாய் என்று நான் நினைக்கவே இல்லை.எதற்கு இப்படி செய்தாய் ரவி"

" என்னை மன்னித்துவிடு பிரியா எல்லாம் எதிர்பாராமல் நடந்து விட்டது" என்றான்

எது எப்படியோ அவனின் வருகை சொல்லமுடியாத மகிழ்ச்சியை தந்தது அவளுக்கு.அவள் கண்களை மூடி நடந்ததை எல்லாம் நினைத்து பார்த்தாள்.அவனை முதல் முதலாக பார்த்தது, அவன் தன் காதலை சொன்ன விதம், அவள் பெற்றோரிடம் அவர்கள் காதலை சொன்ன விதம், திடிரென்று ஒரு நாள் காணாமல் போனது, இப்பொழுது இப்படி மீண்டும் இணைந்தது என  எல்லாநிகழ்ச்சிகளும் ஒன்றின் பின் ஒன்றாக அவள் கண் முன் நிழலாடின. மீண்டும் கண்ணீர் உற்றென பெருகி ஆறாக அவள் கன்னங்களில் பாய்ந்து ஓடியது.

அவள் கண்களை இதமாக துடைத்த " ஐ லவ் யூ ஹனி " என்று அவள் கண்களை .ஆழமாக பார்த்தான்.

" ஐ லவ் யூ டூ " என்று குதூகலமாக அவன் கன்னத்தில் முத்தமிட்டாள்.

தான் அணிந்திருந்த சொட்டரை கழற்றி அவளுக்கு போர்த்தி விட்டான்.
அவனது இந்த அரவணைப்புக்காக தானே அவள் இத்தனை  நாள் ஏங்கி கிடந்தாள்.இந்த காதல்  நிறைந்த அன்பிலும் அரவணைப்பிலும் ஆயுள் முழுக்க அடைந்து கிடக்க தானே  விரும்பினாள்.

நீண்ட நேரம் அவர்கள் இருவரும் அங்கேயே ஒருவர் மடியில் மற்றொருவர் சாய்ந்து அன்பில் திளைத்தார்கள்.இந்த குறுகிய கால பிரிவு அவர்கள் காதலை மேலும் பலப்படுத்தியது.ஒருவரை ஒருவர் எவ்வளவு நேசிக்கிறார்கள் என்பதை உணர்த்தியது.

"சரி வா வீட்டுக்கு போகலாம். உன்னை பார்த்தால் அம்மா அப்பா இரண்டு பெரும் ரொம்ப சந்தோசப்படுவாங்க " என்றாள்.

அவன் எழுந்து அவளுடன் கைகோர்த்து நடந்தான் அவன் தோளில் சாய்ந்து சாலையோர பூக்களை தன் மறுகையால் வருடியபடி நடந்தாள் அவள். அந்த பூக்களில் இருந்த பனித்துளிகளை இலைகளை அசைத்து அவன் மீது விழ செய்தாள். அவளது இந்த விளையாட்டுதனத்தை ரசித்தபடி நடந்தான். அவளிடம் ஓர் ஆண்டு காலமாக காணாமல் போயிருந்த புன்னகை,மகிழ்ச்சி எல்லாமே அவன் வருகையால் திரும்பி வந்து ஒட்டிக் கொண்டது .

சற்று தூரம் நடந்ததும் கூட்டமாக  மக்கள் இருந்ததை பார்த்து " ஏய், அது என் வண்டி " என்று கத்தி கூட்டத்தை விலக்கி நின்றிருந்த காவலர்களை தண்டி அந்த வண்டியின் அருகே ஓடினாள்.அவனும் அவளை பின்தொடர்ந்தான்.

அங்கே இறந்து கிடந்த அவள் சடலத்தை கண்டதும் அதிர்ச்சியில் சிலையாக உறைந்து நின்றாள்.

"ர ....ர....வி.... அது....அது....." அதற்கு மேல் பேச முடியாமல் அவன் தோளை இறுக பற்றிக் கொண்டும் கண்களை மூடிக்கொண்டும் கையை நீட்டி காட்டினாள்.

இறந்து கிடந்த அவள் தேகத்தை ஆம்புலன்சில் ஏற்றிக் கொண்டு போனார்கள்.

அப்பொழுது தான் காலையில் வண்டியில் வரும்போது அவளுக்கு நேர்ந்த விபத்து நினைவிற்கு வந்தது. அந்த விபத்தில் தான் ரவியை சந்தித்தாள். அப்படியென்றால் நீயுமா??? என்பதுபோல் கண்களில் நீர் ததும்ப அவனை பார்த்தாள்.

"ஆம். உன்னை பார்க்க வந்த அந்த இரவு ஒரு லாரி மோதி என் உயிரும் உடலும் உன்னை விட்டு பிரிந்தது" கண்களில் கண்ணீர் வழிய சொன்னான்.

"இனி நம்மை யாரும் பிரிக்கவே  முடியாது ரவி" என்று அவனை இறுக அணைத்துக் கொண்டாள்.அவளின் அந்த நேசமே அவனுடன் அவளை சேர்த்தது. அவன் அருகில் இருப்பதால் மரணத்தை கூட ரசித்தாள்.

                                   ----------------------முற்றும் -----------------------

புதன், 11 டிசம்பர், 2013

தெரியுமா உங்களுக்கு ?

*1. 'தாழ்ப்பாளை சும்மா போட்டு லொட்டு லொட்டுனு ஆட்டக்கூடாது.* அப்படிச் செய்தா... வீட்டுல சண்டை வரும்.'
அதாவது, தாழ்ப்பாளை அடிக்கடி ஆட்டினால், கதவுடன் இணைக்கப்பட்டிருக்கும் தாழ்ப்பாள், லொட லொடக்க (ஸ்க்ரூ, சக்கை கழன்று) ஆரம்பித்துவிடும். திருடர்கள் வீட்டுக்குள் சுலபமாக வருவதற்கு நாமே வழி ஏற்படுத்தியது போலாகிவிடும்.

*2. 'வீட்டுக்குள்ள நகம் வெட்டினா... வீடு விளங்காது.*'
வெட்டித் துண்டாகும் நகம் எங்காவது தெறித்து விழும். சமயங்களில் உணவுப் பொருளில்கூட கலக்க வாய்ப்புண்டு. காலில்கூட அது ஏறி... வில்லங்கத்துக்கு வழிவகுத்துவிடும்.

*3. 'நகத்தைக் கடித்தால் தரித்திரம*்.'
நக இடுக்குளில் உள்ள அழுக்கு, வாய் வழியாக உடலுக்குள் சென்று, பல்வேறுவிதமான நோய்களுக்கு வழி ஏற்படுத்திவிடும்.

*4. 'உச்சி வேளையில கிணத்தை எட்டிப் பார்க்கக் கூடாது.'*
கிணற்றுக்குள் பல்வேறு விஷவாயுக்கள் உற்பத்தியாகும். உச்சிவெயில் நேரத்தில் நேரடியாக சூரிய வெளிச்சம் கிணற்றுக்குள் விழுவதால் அந்த வாயுக்கள் வெப்பத்தால் லேசாகி மேலே பரவும். எட்டிப் பார்ப்பவர்களை அது தாக்கினால் ஆபத்து.

*5. 'இருட்டிய பிறகு குப்பையை வெளியே கொட்டினால் லட்சுமி வெளியே போய்விடுவாள்.*'
வீட்டுக்குள் பகல் முழுக்க நடமாடும் நாம், ஏதாவது சின்னஞ்சிறு நகை போன்ற பொருட்களை தவறவிட்டிருந்தால், அது குப்பையில் சேர்ந்திருக்கும். இரவு நேரத்தில் அள்ளி தெருவில் கொட்டிவிட்டால், பிறகு தேடிக் கண்டுபிடிப்பது சிரமத்திலும் சிரமம்.

*6. வீட்டில் புறா வளர்க்கக் கூடாது. வளர்த்தால் குடும்பம் அழிந்துவிடும்.'*
புறாக்கழிவுகளின் வாசனை பாம்பை ஈர்க்க வல்லது. அதனால் அதைத் தேடி விஷப்பாம்புகள் வரும்.

*7.  'இரவு நேரங்களில் கீரை சாப்பிட்டால்... எமனுக்கு அழைப்பு வைப்பதுபோல!'*
கீரை எளிதில் ஜீரணமாகாது. அதிலும் இரவில் சாப்பிட்டுப் படுத்தால், தேவையற்ற உடல் தொந்தரவுக்கு வழி வகுத்துவிடும். எனவே, பகல் வேளைகளில் மட்டுமே அதைச் சாப்பிட வேண்டும்.

*8.  'புளிய மரத்துக்கு கீழே படுத்தால் பேய் அடிக்கும்.'*
புளிய மரம் இரவில் அதிக கார்பன் டை ஆக்ஸைடு வாயுவை வெளியிடும். அதனால் மூச்சுத்திணறல் கூட ஏற்படலாம். இதைத்தான் அமுக்குவான் பிசாசு என்றுகூட சொல்வார்கள்.

*9.  முருங்கை மரம் வாசலில் வைத்தால் வீட்டுக்கு ஆகாது.'*
மரங்களிலேயே மிகவும் மென்மையான மரம் என்பதால், குழந்தைகள் ஏறினால்கூட பட்டென்று கிளைகள் முறிந்து, விபத்துக்கு வழி வகுத்துவிடும். தவிர, அதில் வரும் கம்பளிப்பூச்சி உள்ளிட்டவை எளிதாக வீடு தேடி வந்து தாக்குதல் நடத்தும்

*10.  தலைவிரி கோலமாக பெண்கள் இருக்கக் கூடாது...'*
சமைக்கும்போதும்... பரிமாறும்போதும் உணவில் தலைமுடி விழுந்து, அருவருப்பு ஊட்டுவதைத் தவிர்க்க வேண்டும் என்பதற்காக!

*11. . 'வடக்கே தலை வைத்துப் படுக்கக் கூடாது.'*
பூமியின் காந்த சக்தியானது வடதுருவத்தை நோக்கி நிற்கிறது. வடதிசையில் தலை வைத்து படுக்கும்போது அதன் ஈர்ப்பு சக்தியானது நம் தலையையும் மூளையையும் தாக்குகிறது. அதனால் ஆரோக்கியம் குறையும் என்ற நம்பிக்கையின் வெளிப்பாடு.

*12. . 'வாழை இலை போடாமல் விசேஷம் நிரக்காது.'*  இந்த இலையில் 'பினாலிக்ஸ்' எனும் இயற்கை சத்து உள்ளது. இதில் தொடர்ந்து சாப்பிட்டு வருபவர்களுக்கு நோய் எதிர்ப்புச் சக்தி கிடைக்கும் என்பது ஆராய்ச்சி முடிவு. இதை அனுபவத்தில் கண்டுணர்ந்து காலகாலமாகக் கடைபிடிக்கிறார்கள்.

வெள்ளி, 6 டிசம்பர், 2013

செவ்வாய், 3 டிசம்பர், 2013

ஆயுத பூஜை

பூ முடித்து,
பொட்டு வைத்து,
சந்தன வாசத்துடன்
சாலையை கடந்தன
வாகனங்கள் ....

மகனே

நீ தவழும் வயதில் - நான்
தாலாட்டினேனே...
நான்
தள்ளாடும் வயதில் - நீ
தவிக்க விட்டாயே...! 

ஞாயிறு, 21 ஜூலை, 2013

வீட்டுக் குறிப்புகள்


எழுதியவர் பிரபாவதி.கோ 

1. சூயிங் கம்மை வாயில் போட்டு மென்று கொண்டே வெங்காயத்தை நறுக்கினால் கண்களில் கண்ணீர் வருவதைத் தவிர்க்கலாம்.

2. சாதம் வெள்ளை வெளே ரென்று  இருக்க  அரிசி களைந்து  வைக்கும் போது அதில் இரண்டு சொட்டு எலுமிச்சை சாற்றை பிழிய வேண்டும்.

3. உண்மையான தேன் என்றால் ஒரு காகிதத்தில் ஒரு துளி தேனை வைத்தால் அது காகிதத்தால் உறிஞ்சப்படாமலும் , பரவாமலும் அப்படியே நிற்கும்.

4. வெங்காயம் வெட்டும் போது அருகில் மெழுகுவர்த்தியைஏற்றிக் கொண்டு வெங்காயத்தை நறுக்கினால் கண்களில் கண்ணீர் வருவதைத் தவிர்க்கலாம்.  

5. கிழங்குகளை உப்பு நீரில் ஊற வைத்து பிறகு வேகவைத்தால் சீக்கிரம் வெந்து விடும்.

6. மருதாணி போடும் போடு வெறும் தண்ணிரை ஊற்ற கூடாது.நீரில் வெண்டைக்காய் துண்டுகளை போட்டு கையால் நன்றாக பிசிறினால் தண்ணீர் வழவழபாகி விடும்.அந்த தண்ணீரை மருதாணி பவுடரில் கலக்கினால் சீக்கிரம் உதிராமல் நல்ல கலராக வரும்.

7. நீரில் சிறிது வினிகரை கலந்து பாத்திரங்களை கழுவினால் பளிசிசென்று இருப்பதுடன் கைகளும் மென்மையாக இருக்கும்.

8. கல் உப்பை ஒரு கைபிடியளவு மிக்சியில் அரைத்தால் பிளேடு கூர்மையாகும்.

9. பட்டு துணிகளை உப்பு கலந்த நீரில் அலசினால் வண்ணம் பாதுகாப்பதுடன் துணியும் மிருதுவாக இருக்கும்.

10. குலோப் ஜாமூன் செய்யும் போது சிறிதளவு வெண்ணை சேர்த்தால் ஜாமூன் மிருதுவாக வரும்.

11. தேங்காய் பர்பி செய்யும் போது தேங்காய் துருவலுடன் சிறிதளவு பால் சேர்த்து மிக்ஸியில் சிறிது நேரம் ஓடவிட்டால் பர்பி வெள்ளையாக வரும்.

12. ஊறுகாய்க்கு கல் உப்பை பொடித்து போட்டால் கெடாது.

13. வெண்டைக்காய் பொரியல் செய்யும் போது அதனுடன் சிறிது சிரகம்,தேங்காய் துருவலை வறுத்து பொடி செய்து சேர்த்தால் பொரியல் மணமாய் ருசியாக இருக்கும்.

14. காய வைத்த வேப்பிலையை அரிசியில் போட்டு வைத்தால் வண்டுகள் வராமல் இருக்கும்.

15. பாலை அகலமான பாத்திரத்தில் ஊற்றி வைத்தால் எவ்வளவு நேரமானாலும் கெடாது.

16. தேங்காயை துறுவி வெயிலில் காய வைத்தால் வேண்டிய போது உபயோகிக்கலாம் .

17. அடைக்கு அறைக்கும் போது காய்ந்த மிளகாயை போட்டு பின் பச்சை மிளகாயை போட வேண்டும்.

18. புளியை உப்பு சேர்த்து கரைத்தால் புளிப்பு சுவை நன்றாக இருக்கும்.

19. ஒரு துண்டு இஞ்சி சேர்த்து சட்னி செய்தால் சுவை கூடும்.

20. ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து இனிப்பு பண்டங்கள் செய்தால் ருசி கூடும்.

21. கத்தியில் சிறிது எலுமிச்சை சாற்றை தடவி கொண்டு ஆப்பிள்,வாழைக்காயை நறுக்கினால் கருக்காது.

22. தக்காளியை தினமும் சாப்பிட்டால், சருமம் இளமையாக இருக்கும்.

23. ஒரு கிளாஸ் தண்ணீரில் ஒரு துளி தேனையிட்டால் அது நீரோடு கரையாமல், நேராக கீழே சென்று அமர்ந்தால் அது  உண்மையான தேன்.

24. வெங்காயம் நறுக்கும் போது தண்ணீரில் ஊற வைத்து  பின் அதனை வெட்டனால் கண்ணீர் வராமல் இருக்கும்.

25. வெங்காயம் வெட்டுவதற்கு 10-15 நிமிடம் ஃப்ரிட்ஜில் உள்ள ஃப்ரீசரில் வைத்து எடுத்தால் வெட்டும் போது கண்களில் தண்ணீர் வராமல் இருக்கும்.

26. வெங்காயத்தை வைத்து நறுக்கும் பலகையில் சிறிது வினிகரை தேய்த்து வெட்டினால்
கண்ணீர் வருவதைத் தவிர்க்கலாம்.   .

27. ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, அதில் உப்பு சேர்த்து, வெங்காயத்தைப் போட்டு ஊற வைத்து,நறுக்கினா
ல் அழுவதைத் தடுக்கலாம்.

28. கிழங்குகள் வெந்த பின் தான் உப்பு சேர்க்க வேண்டும்.

29. கிழங்குகளை அரிசி கழுவிய நீரில் வேக வைத்தால் சீக்கிரம் வேகும்.

30.ஊறுகாயில் ஒரு சிட்டிகை சோடியம் பென்சொயிடு போட்டு வைத்தால் கெடாது.

31.தினமும் மூன்று வேளை தயிரை உட்கொண்டால் உடல் பருமன் குறைந்து அழகாக தோற்றமளிக்கலாம்.

32. ஒரு சொட்டு நல்லெண்ணெய் விட்டு பருப்பை வேக வைத்தால் சீக்கிரம் வெந்துவிடும்.

33. சப்பாத்தி செய்யும் போது சிறிது மைதா சேர்த்து கொண்டால் சப்பாத்தி உப்பும்.

34.சாம்பாரில் உப்பு அதிகமானால் உருளை கிழக்கை வெட்டிப் போடவும்.

35. சோம்பு,பிடிகரனை ஆகியவற்றை இட்லி தட்டில் வேக வைத்தால் குழையாது.

36. குலோப் ஜமூன் பாகில் ஒரு ஸ்பூன் தேன் கலந்தால் உறையாமலும் கேட்டுப் போகாமலும் இருக்கும்.

37. நமுத்துப் போய் விட்ட  பாண்டங்களை சூடான வெறும் வாணலியில் போட்டு எடுத்தால் முறுமுறுப்பாகி விடும்.

38. பிசைந்த சப்பாத்திமாவுடன் தோல் சீவிய ஒரு உருளை கிழங்கை போட்டு வைத்தால் கெடாது.

39. பிசைந்த சப்பாத்தி மாவுடன் ஒரு ஸ்பூன் எண்ணெய் அதன் மேல் பூசி வைத்தால் மாவு கெடாது.

40. வயிற்றுப் புண்ணினால் ஏற்படும் வலியைக் குறைக்க, மிதமான சூடான வெந்நீரைச் சிறிது சிறிதாகக் குடிப்பது நல்லது.
 

41. பில்டரில் காபிப் பொடி போடுவதற்கு முன் அதிலுள்ள துளைகளின் மேல் பரவலாக சர்க்கரையை போட்டால் துளை அடைத்துக் கொள்ளாது.

43. நல்ல பலமான விருந்து சாப்பிட்ட பிறகு வெந்நீரைக் குடித்தால், சாப்பிட்ட விருந்தானது எளிதில் ஜீரணமாகி விடும்.



44. கையில் நல்லெண்ணெய் தடவி கொண்டு சேனை கிழங்கை நறுக்கினால் அரிக்காது.

45. வயிற்றுப்போக்குஏற்பட்டால், அதிக அளவு நீர்ச் சத்து உடலில் குறையும். இதனைச் சமாளிக்க, இளநீர் அருந்தலாம்.

46. மைசூர்பாக் செய்து இறக்கும் பொழுது ஒரு சிட்டிகை சோடா உப்பு சேர்த்தால் மொறுமொறுப்பாக இருக்கும்.

47. வாழைக்காய்,கத்தரிக் காயை அரிந்ததும் உப்பு தண்ணீரில் போட்டால் கருக்காது.

48. வாழைக்காயை தண்ணீரில் போட்டு வைத்தால் பழுக்காது.

49. அடிக்கடி வெந்நீர் குடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு அஜீரணத்தால் ஏற்படும் தலைவலி வரவே வராது.

50. வெந்நீர் ரத்தத்தில் உள்ள நஞ்சை வெளியேற்றுகிறது.

51. மிருதுவான சருமம் பெற, பார்லி ஒரு தேக்கரண்டி போட்டு வேகவிட்ட வெந்நீரை அடிக்கடி குடித்து வர வேண்டும்.

52. பச்சை மிளகாய் பழுக்காமல் இருக்க அதனுடன் ஒரு சிட்டிகை மஞ்சள் பொடி  போட்டு வைக்கலாம்.

53. கால் பொறுக்கும் அளவுக்கு வெந்நீரை ஒரு டப்பில் விட்டு, அதில் கல் உப்பையும் போட்டுக் கலக்கவும். அந்த வெந்நீரில், கால் பாதங்களைப் பதினைந்து நிமிடங்கள் வைத்து எடுத்தால் கால் வலி குறையும்.
 

54. பித்தவெடிப்பு உள்ளவர்கள் வெந்நீரில் கால் பாதங்களை வைத்து எடுத்த பிறகு, பாதங்களை பியூமிஸ் ஸ்டோன் கொண்டு தேய்த்தால், நாளடைவில் பித்த வெடிப்பு குணமாகி விடும்.


55. புளிக்கரைசலை ஐஸ்டிரேயில் ஊற்றி ப்பிரிட்ஜில் ப்பிரீசரில் வைத்து தேவைப்படும் போது உபயோகித்து கொள்ளலாம்.

57. தாகம்  எடுக்கும் போது பச்சைத் தண்ணீரைக் குடிக்காமல், பொறுக்கும் அளவு சூடான வெந்நீரைக் குடித்து வந்தால், உடம்பில் உள்ள வேண்டாத கழிவுகள் வெளியேறும்.
  

58. நறுக்கிய ஆப்பிள்,பேரிக்கையை உப்பு நீரில் போட்டால் கருக்காது.

59. சாப்பிடுவதற்கு அரை மணி நேரம் முன்பு, ஒரு தம்ளர் வெந்நீர் குடித்து வந்தால் உடல் எடை குறையும். 

60. சமையல்  செய்யும் போதே உப்பு  போட்டு விட்டால் சுவை நன்றாக இருக்கும்.

61. முகத்தில் பருக்கள், புள்ளிகள், சுருக்கங்கள் மற்றும் படை ஏற்பட்டால், இளநீரை இரவில் படுக்கும்போது முகத்தில் தடவி, காலையில் கழுவ வேண்டும். இதைத் தொடர்ச்சியாக மூன்று வாரங்கள் செய்தால், தோல் பிரச்னைகள் அனைத்திற்கும் தீர்வு கிடைக்கும்.

62. தேங்காய் துருவலை பாலிதீன் பையில் போட்டு ப்பிரீசரில் வைத்தால் சில நாட்கள் வரை கெடாது.

63. கொதிக்கும் நீரில் தக்காளியை போட்டு எடுத்தால் தோல் எளிதாக உரியும்.

64. பல்லிகளை விரட்ட மயில் இறகை சுவரில் ஒட்டவும்.

65. நக போலிஷ் கெட்டியாகி விட்டால் அசிடோன் சில சொட்டுக்கள் சேர்த்தால் நன்றாக இருக்கும்.

66. ரவையில் பூச்சி பிடிக்காமல் இருக்க லேசாக வறுத்து வைக்கவும்.

67. சுவரில் உள்ள சுண்ணாம்பு உதிரிந்து விட்டால் சிறிதளவு டூத்பேஸ்டு தடவவும்.

68. இரவில் தூங்குமுன் கண்ணில் சில சொட்டு விளக்கெண்ணெய் விட்டால் கண்கள் சுத்தமாகி விடும்.

69. எறும்புகள் வராமல் இருக்க படிகாரத்தூள் தூவி விடவும்.

70. செடிகளில் பூச்சிகள் இருந்தால் சாம்பலை தெளித்தால் போய் விடும்.

71. முட்டை ஓடுகளை தூக்கி எறியாமல் அதன் மீது ஸ்கெட்ச் பேனாவால் படம் வரைந்து சுவரில் மாட்டினால் பல்லிகள் வராது,அலங்காரமாகவும் இருக்கும்.

72. உப்பு நீரில் வாய் கொப்பளித்தால் பல் வலி குறையும்.

73. தண்ணீரில் சீரகம் போட்டு காய்ச்சி குடித்தால் குரல் வளம் பெரும்.

74. கண் எறிச்சல் தீர கண்களின் மேல் மல்லிகைப் பூக்களை வைத்து கட்டிக் கொண்டு ஓய்வெடுத்தால் குறையும்.

75. பட்சணங்களை சுடும் போது எண்ணெய் அதிகம் செலவாகாமல் இருக்க ஒரு கோலி குண்டு அளவு புளியை கொதிக்கும் எண்ணெய்யில் போடவும்.

76. பூண்டை தோல் உரிக்க பரிஜ்ஜில் வைத்து எடுத்து உரிக்கவும்.

77. தொலைபேசியை ஒரு சொட்டு 'சென்ட்'ஆல் துடைத்தால் வாசனையாக இருக்கும்.

78. துணிகளை ஊற வைக்கும் போது கலியன சாம்பூ கவர்களை போட்டு ஊற வைத்தால் துணிகள் நல்ல வாசனையுடன் இருக்கும்.

79. காலணி (ஷு ) நனைந்து விட்டால் செய்திதாளை அதனுள் நன்றாக திணித்து வைத்தால் ஈரத்தை செய்திதாள் ஊறிஞ்சிவிடும்.

80. ஷு ' மீது பழைய ஆயிண்டுமெண்டை தடவி பிறகு அதன் மேல் பாலிஷ் செய்தால் பளபளப்பாக இருக்கும்.

81. ஏர் கூலரில் சில சொட்டுகள் பர்ப்யூம் ஊற்றினால் குளிர்ந்த காற்றுடன் நல்ல நறுமானமும் வீசும்.

82.விபூதியால் பித்தளை பொருட்களை தேய்த்தால் பளபளப்பாகும்.

83. சேனைக் கிழங்கை தோல் எடுத்த பிறகே வேக வைக்க வேண்டும.





சனி, 20 ஜூலை, 2013

நிஜம்

நேற்று உன்னோடு
வாழ்ந்தேன் நிஜமாக
இன்று உன் நினைவுகளோடு
வாழ்கிறேன் சுகமாக

நேற்றைய நிஜம்
இன்றைய நினைவு

நிலையற்ற நிஜம்  தந்த
அழிவற்ற  நினைவுகளை

அடைகாத்து  மகிழ்கின்றேன்
அனுதினமும் சேமிக்கிறேன்



வெள்ளி, 19 ஜூலை, 2013

காதல்


பட்டம் வாங்கிட
கல்லூரியில்
காலடி வைத்தேன்
விழுந்தது என்னவோ
புதைகுழியில்....

மழை


இயற்கை எய்திய
வாலிபகவி வாலிக்கு 
இயற்கையின்
கண்ணீர் அஞ்சலி

கட்டை

உன் கட்டை எரிய
உடன் கட்டை ஏறுகிறது
மரக்கட்டை



செவ்வாய், 9 ஜூலை, 2013

அழகு குறிப்புகள் - II

  • கை நகங்களை நீளமாக வளர கைகளில் ஆலிவ் எண்ணெய் தடவி மசாஜ் செய்யவும் .
  • துளசி இலைகளை கையால் நசுக்கி அதன் சாற்றை பூசினால் முகப்பரு.
  • வியர்க்குறு தொல்லை தீர சந்தனத்தை அரைத்து தடவவும்.உடல் குளிர்ச்சி அடையும்.
  • பாலாடையை உதட்டில் தடவி வர உதடுகள் அழகுடன் மிளிரும்.
  • கண்கள் சோர்வடையும் போது மல்லிகை பூக்களை கண்களுக்கு மேல் கட்டிக் கொண்டு ஓய்வெடுத்தால் சோர்வு நீங்கும்.
  • கடுகு எண்ணெயால் மசாஜ் செய்தால் தொப்பை குறையும்.
  • பட்டு போன்ற கைகளுக்கு தினமும் பேபி ஆயிலை கொண்டு மசாஜ் செய்யவும்.
  • முகத்தை ஐஸ் தண்ணீரால் கழுவிய பின் மேக்கப் செய்து கொண்டால் நீண்ட நேரம் மேக்கப் களையாமல் இருக்கும்.
  • இரவில் தூங்கும் முன் கண்களில் ஒரு சொட்டு ஆமணக்கு எண்ணெய் விட்டால் கண்கள் சுத்தமாகி விடும்.
  • கஸ்துரி மஞ்சள் அரைத்து பூசி வர சருமம் மிளிரும்.
  • மருதாணி போடுவதற்கு முன் கையில் ஏதாவது ஒரு தலைவலி பாமை தடவிக் கொண்டால் மருதாணி நன்றாக சிவக்கும்.
  • சூடான தவாவில் ஒரு கிராம்பு போட்டு அதன் மேல் ஒரு சொட்டு எண்ணெய்  விட்டு அந்த சூட்டில் மருதாணி இட்ட கைகளை காட்டினால் மருதாணி நன்றாக சிவக்கும்.

பாட்டி வைத்தியம்

  •  நெஞ்சு சளிக்கு தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும். 
  • தலைவலிக்கு ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும். 
  • தொண்டை கரகரப்புசுக்கு, பால் மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட தொண்டை கரகரப்பு குணமாகும். 
  • தொடர் விக்கல்uக்கு நெல்லிக்காய் இடித்து சாறு பிழிந்து, தேன் சேர்த்து சாப்பிட்டால் தொடர் விக்கல் தீரும். 
  • வாய் நாற்றம் சட்டியில் படிகாரம் போட்டு காய்ச்சி ஆறவைத்து அதனை ஒரு நாளைக்கு மூன்று வேளை வாய் கொப்பளித்து வந்தால் வாய் நாற்றம் போகும்.
  • உதட்டு வெடிப்புக்கு கரும்பு சக்கையை எடுத்து எரித்து சாம்பலாக்கி, அதனுடன் வெண்ணெய் கலந்து உதட்டில் தடவி வர உதட்டு வெடிப்பு குணமாகும்.
  • அஜீரணம் ஒரு டம்ளர் தண்ணீரில் கருவேப்பிலை, இஞ்சி, சீரகம், மூன்றையும் கொதிக்க வைத்து ஆறவைத்து வடிகட்டி குடிக்க அஜீரணம் சரியாகும். 
  • குடல்புண்க்கு மஞ்சளை தணலில் இட்டு சாம்பல் ஆகும் வரை எரிக்க வேண்டும். மஞ்சள் கரி சாம்பலை தேன் கலந்து சாப்பிட குடல் புண் ஆறும்.
  • வாயு தொல்லைக்கு வேப்பம் பூவை உலர்த்தி தூளாக வெந்நீரில் உட்கொள்வதினால் வாயுதொல்லை நீங்கும். ஆறாத வயிற்றுப்புண் நீங்கும். 
  • வயிற்று வலிக்கு வெந்தயத்தை நெய்யில் வறுத்து பொடி செய்து மோரில் குடிக்க வயிற்று வலி நீங்கும்.
  •  மலச்சிக்கல் செம்பருத்தி இலைகளை தூள் செய்து, தினமும் இருவேளை சாப்பிட்டு வர மலச்சிக்கல் தீரும்.
  • மலை வாழைப்பழத்தை நல்லெண்ணையில் சேர்த்துச் சாப்பிட சீதபேதி குணமாகும்.
  • பித்த வெடிப்புக்கு கண்டங்கத்திரி இலைசாறை ஆலிவ் எண்ணையில் காய்ச்சி பூசி வந்தால் பித்த வெடிப்பு குணமாகும்.
  • மூச்சுப்பிடிப்புக்கு சூடம், சுக்கு, சாம்பிராணி, பெருங்காயம் இவைகளை சம அளவு எடுத்து சேர்த்து வடித்த கஞ்சியில் கலக்கி மறுபடியும் சூடுபடுத்தி மூச்சுப்பிடிப்பு உள்ள இடத்தில் மூன்று வேளை தடவினால் குணமாகும்.
  • சரும நோய்க்கு கமலா ஆரஞ்சு தோலை வெயிலில் காயவைத்து பொடி செய்து தினமும் சோப்புக்கு பதிலாக உடம்பில் தேய்த்து குளித்து வர சரும நோய் குணமாகும்.
  • தேமல் வெள்ளை பூண்டை வெற்றிலை சேர்த்து மசிய அரைத்து தினமும் தோலில் தேய்த்து குளித்து வர தேமல் குணமாகும்.
  • மூலம் கருணைக் கிழங்கை சிறுதுண்டுகளாய் நறுக்கி துவரம் பருப்புடன் சேர்த்து, சாம்பாராக செய்து சாப்பிட்டு வர மூலம் குணமாகும்.
  • தீப்புண் வாழைத் தண்டை சுட்டு அதன் சாம்பலை தேங்காய் எண்ணையில் கலந்து தடவி வர தீப்புண், சீழ்வடிதல் மற்றும் காயங்கள் விரைவில் குணமாகும்.
  • மூக்கடைப்புக்கு ஒரு துண்டு சுக்கை தோல் நீக்கி அரை லிட்டர் நீரில் போட்டு சுண்டக் காய்ச்சி, பால், சர்க்கரை சேர்த்துக் காலை, மாலை சாப்பிட்டு வர மூக்கடைப்பு விரைவில் நீங்கும்.
  • வரட்டு இருமல் எலுமிச்சம் பழசாறு, தேன் கலந்து குடிக்க வரட்டு இருமல் குணமாகும்
  • நரம்பு சுண்டி இழுத்தால் ஊற வைத்து, முளைக்க வைத்ததானிய வகைகளை சாப்பிட்டால் இந்த நோய் வராது. வாரத்தில் 3 தடவைகளாவது சேர்த்துக் கொண்டால் நல்ல பலன் இருக்கும். நரம்பு நாளங்களை சாந்தப்படுத்தும் குணம் தேனுக்கு உடையது.
  • பல் சொத்தைக்கு சிறிது வேப்பங்கொழுந்து எடுத்து, நன்றாக பற்களின் எல்லாப் பகுதியிலும் படும்படி மென்று சாப்பிட வேண்டும்.
  • உடல் பருமன் குறைய வெங்காயத்தில் கொழுப்புச் சத்து குறைவு. அதனால் உடல் பருமனைக் குறைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் உணவில் தாராளமாக வெங்காயம் சேர்த்துக் கொள்ளலாம்.
  • தேன் உடல் பருமனைக் குறைக்கும்.தேனுடன் குளிர்ந்த தண்ணீரை கலந்து அருந்தினால் உடல் பருமன் குறையும்.
  • வெண்மையான பற்களைப் பெற ஒவ்வொரு முறையும் சாப்பிட்ட பின்பு வாயை நன்றாகக் கழுவ வேண்டும். தூங்கப் போகும் முன்பும், தூங்கி எழுந்த பின்பும் பல் தேய்க்க வேண்டும். பல்தேய்த்துக் கழுவும் போது ஈறுகளைத் தேய்த்துத் தடவி கழுவ வேண்டும். இதனால் பற்களும் ஈறுகளும் வலுவடையும்.
  • கணைச் சூடு குறைய சூட்டினால் சில குழந்தைகள் உடல் மெலிந்து நெஞ்சுக் கூடு வளர்ச்சி இன்றி மெலிவாகவும் இருப்பார்கள். அவர்களுக்கு தினமும் ஆட்டுப்பாலில் 2 தேக்கரண்டி தேன் கலந்து கொடுத்தால் கணைச் சூடு குறைந்து உடல் தேறிவிடும்.
  • வலுவான பற்கள் வேப்பங்குச்சியினால் பல் துலக்கினால் பற்கள் நல்ல ஆரோக்கியமாக இருக்கும்.முருங்கைக்காயை நறுக்கி, பொரியல் செய்து அல்லது சாம்பாரில் போட்டு சாப்பிட்டால் பற்கள் வலுவடையும். தினமும் சாப்பிட்டால் வயோதிகத்திலும் பற்கள் நன்கு உறுதியாக இருக்கும்.
  • உடல் சூடு ரோஜா இதழ்கள், கல்கண்டு, தேன் ஆகியவற்றைக் கலந்து தயாரிக்கும் குல்கந்தை தினமும் சாப்பிட்டு வந்தால் உடல் சூடு தணியும்.
  • கற்கண்டு சாப்பிடுவதால் இரத்தம் சுத்தமாகும். கண்களில் ஏற்படும் திரை அகன்று, கண்னொளி பெருகும். கண் சிவப்பை மாற்றும். வெண்ணெய்யில் சேர்த்து தினமும் சாப்பிட்டு வந்தால் உடல் பெருக்கும்.
  • கக்குவான் இருமல் வெற்றிலைச் சாறுடன், தேன் கலந்து கொடுத்தால் குழந்தைகளுக்கு வரும் கக்குவான் இருமல் குணமாகும்.
  • உள்நாக்கு வளர்ச்சி உப்பு, தயிர், வெங்காயக் கலவை உள்நாக்கு வளர்ச்சியைத் தடுக்கும்.
  • இரத்தசோகை நோய்க்கு தேன் ஏற்ற மருந்து. இதற்குக் காரணம் அதில் இரும்புச்சத்து இருப்பதாகும்.ஆட்டுப் பாலை வடிகட்டி, தேன் கலந்து பருகினால் உடல் வலிமை ஏற்படும். உடலுக்குத் தேவையான இரத்தத்தை ஊறச் செய்யும்.
  • உடலில் தேமல் மறைய தொடர்ந்து மருந்து எடுத்துக்கொண்டால் மட்டுமே குணமாகும்.
  • வெதுவெதுப்பான தண்ணீரில் எலுமிச்சம் பழச்சாறு கலந்து காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.
  • எலுமிச்சம் பழச் சாற்றை முகத்தில் தேய்த்து, சிறிது நேரம் கழித்து கழுவ வேண்டும்.
  • ஆடு தீண்டாப் பாளையை, தேங்காய் எண்ணெய்யில் போட்டு, 1 வாரம் வெய்யிலில் வைத்த பிறகு தேமல் இருக்குமிடத்தில் தடவினால் தேமல் மறையும்.
  • மோரில் முள்ளங்கியை அரைத்து இந்தக் கலவையை முகத்தில் தேய்த்தால் தேமல் மறையும்.
  • 1 துண்டு வசம்புடன் பூவாரம்பட்டை சேர்த்து அரைத்து இரவில் பற்றுப் போட்டு வந்தால் நாளடைவில் தேமல் குணமாகும்.
  • தேமல் இருந்தால்  சோப்பு போட்டுக் குளிக்கக் கூடாது.
  • மலேரியாவால் தாக்கப்பட்டவடர்கள் தினமும் துளசி இலையை சிறிதளவு காலையில் வெறும் வயிற்றில் மென்று விழுங்கி வந்தால் ஓரிரு நாட்களில் நோய் நீங்கிவிடும்.
  • மலேரியா போன்ற நோய்கள் பரவக் கொசுக்களே மூல காரணம். துளசியின் வாடை பட்டால் கொசுக்கள் அவ்விடத்திற்கு வராது. கொசு தொல்லையை நீக்க வீட்டில் துளசி செடிகளை வளர்க்கலாம்.
  • தீக்காயங்கள் பட்டவுடன் முதலில் தண்ணீரில் கழுவ வேண்டும்.
  • தீப்பட்ட புண்ணின் மேல் தொடர்ந்து தேன் தடவி வந்தால் புண் குணமாகி விடும். தீக்காயங்களை ஆற்றுவதற்கு தேன் உகந்தது. வலி நீங்கும். தீக்கொப்புளங்கள் ஏற்படாமல் தடுக்கும்.
  • முட்டைக்கோஸ் இலைகளை சிறுசிறு துண்டுகளாக்கி, முட்டையில் உள்ள வெள்ளைக் கருவுடன் கலந்து தீக்காயங்கள், புண்கள், காயங்கள் மீது தடவினால் விரைவான குணம் கிடைக்கும். 
  • தீப்புண்களுக்கு முட்டையின் வெள்ளைக் கருவைத் தடவி குணப்படுத்தலாம்

திங்கள், 8 ஜூலை, 2013

குப்பை தொட்டியாய் மாறிய சமூக நலக் கூடம்

சென்னை அரும்பாக்கத்தில் உள்ள எம் எம் டி  எ காலனியில் மெயின் ரோட்டில் உள்ளது இந்த சமூக நலக் கூடம்.

சமூக நலக் கூடம்
பத்து வருடங்களுக்கு முன் இங்கு நடக்காத திருமணம் இல்லை.வெறும் திருமணங்கள் மட்டும் இல்லை நிச்சய தார்த்தம்,பிறந்த நாள் விழா,பள்ளி ஆண்டு விழா என மேலும் பல வகையான சமுக நிகழ்ச்சிகள் இங்கே நடைபெற்றிருக்கின்றன .



குப்பைகளின் குவியல்

ஏதோ சில காரணங்களுக்காகஅரசாங்கம் இதன் பயன்பாட்டை நிறுத்திவிட்டதால்,இந்த சமுக நலக் கூடம் பூட்டப் பட்டது.


அன்று முதல் இந்த இடத்தை பொது மக்கள் குப்பைகளை கொட்டவும்,தங்கள் வீடு இடிபாடுகளை கொட்டவும் இந்த இடத்தை பயன்படுத்துகிறார்கள்.






பின்புறம் 
சிலர் சிறுநீர் கழிக்கவும்,சிலர் இரவில் மது பாட்டில்கள் கொண்டு வந்து மது அருந்தவும் மேலும் சிலர் புகை பிடிக்கவும் பயன்படுத்துகிறார்கள்.


அருகில் வசிப்பவர்கள் யாராவது தட்டி கேட்டால் எது என்ன உங்க சொத்தா என்று கேட்கிறார்கள்.
Debris along with Garbages

Community hall back side view
இங்கே நாய்களும் பூனைகளும் குட்டி போட்டு இனபெருக்கம் செய்கின்றன.இவற்றோடு போட்டி போட்டு கொண்டு கொசுக்களும் பெருகி வருகின்றன.
Using it for Parking



அரசாங்கம் எதாவது நடவடிக்கை எடுக்கும் என்று பலமுறை புகார் கொடுத்ததும் இது வரை எந்த பலனும் இல்லை.

Fenced by residents
இங்கே சேர்ந்து இருக்கும் குப்பையால் கொசுக்கள் பெருகி அங்கு வசிப்பவர்களுக்கு பெரும் தொல்லையாக இருக்கிறது.
குப்பைமேடாகி போன சமுக நலக் கூடம் 
பொது மக்கள் அதிகமாக வந்து இங்கு சிறுநீர் கழிப்பதால் அங்கு ஒரே துர்நாற்றம் வீசுகிறது.இது அருகில் வசிப்பவர்களுக்கு பெரும் தொல்லையாக உள்ளது.

இதை தடுக்க அங்கு வசிப்பவர்கள் வேலி அமைத்தும் எந்த பயனும் இல்லை.ஓரிரு நாட்களில் அதை உடைத்துக் கொண்டு மீண்டும் அதை பயன்படுத்துகிறார்கள்.

சிறுநீர் கழிக்கும் ஒருவர் 











விலங்கு கழிவுகளுடன் குப்பைகளும் சேர்ந்து துர்நாற்றம் விசுவதுடன் நோய் ஏற்படவும் ஆபாயம் இருப்பதால் அங்கு வசிப்பவர்கள் மிகுந்த அட்சம் அடைகிறார்கள்.
He is using it as a open toilet
பத்திரிகை துறையாவது எதாவது செய்யும் என்ற நம்பிக்கையில் பல முறை பத்திரிகையில் இந்த இடத்தின் நிலையை வெளியிட்டு இருந்தாலும் அரசாங்கமோ அரசியல் தலைவர்களோ அதை பற்றி கவலை படுவதாக இல்லை.


A CLOSE UP
அரசாங்கம் கூடிய விரைவில் இந்த பிரச்சணையை தீர்க்கும் என்ற நம்பிக்கையுடன் எதிர் பாப்போம்....

புதன், 3 ஜூலை, 2013

மைல்கல்லின் ரகசியம்

 சாலைகளில் உள்ள மைல்கல் மூலம் நாம் செல்ல வேண்டிய தூரத்தை மட்டுமல்ல… இன்னொரு விஷயத்தையும் தெரிஞ்சுக்கலாம். மைல் கல்லில் உள்ள கலரை வைத்து அது எந்த சாலை என்பதை அறிந்து கொள்ளலாம். இதோ தெரிஞ்சுக்கோங்க…

* மைல்கல்லில் மஞ்சள் மற்றும் வெள்ளை கலர் இருந்தால் அது தேசிய நெடுஞ்சாலை

* பச்சை மற்றும் வெள்ளை கலர் என்றால் மாநில நெடுஞ்சாலை

* நீலம், வெள்ளை கலர் இருந்தால் மாவட்டசாலை

* பிங்க் அல்லது கருப்பு, வெள்ளை நிறம் இருந்தால் ஊரக சாலை.

திங்கள், 1 ஜூலை, 2013

வீட்டுக் குறிப்புகள்


1.தயிர் புளித்து விடாமல் இருக்க அதில் ஒரு துண்டு தேங்காயை போட்டு வைத்தால்  தயிர் புளிக்காது.

2.வெங்காயத்தின் மீது லேசாக எண்ணெய்  தடவி சற்று நேரம் வெயிலில் காய வைத்து பின் முறத்தில் போட்டு புடைத்தால் தோல்  அகன்று விடும்.


3.நறுக்கிய வாழைக்காயை உப்பு கலந்த நீரில் போட்டு வைத்தால் கருத்துப் போகாது.

4.உப்பு கலந்த வெதுவெதுப்பான நீரில் முட்டைகோஸ்,காலிபிளவர் ஆகியவற்றை போட்டு வைத்தால் அதிலுள்ள சிறு பூச்சிகள் இறந்து நீரில் மிதக்கும்.

5.தேனீர் போட நீரையும் சர்க்கரையையும் சேர்த்து கொதிக்க வைத்தால் சுவையாக இருக்கும்.

6.நறுக்கிய கத்திரிக்காயை உப்பு கலந்த நீரில் போட்டு வைத்தால் கருத்துப் போகாது.

7.கடலை பருப்பில் கடுகு எண்ணெய்  சிறிது கலந்து காய வைத்தால் கெடாது.

8.சாம்பார் ,மோர்குழம்பு ஆகியவற்றிற்கு பருப்பு உருண்டை செய்து போடும் போது  ஒரு மேஜைகரண்டி  அரிசி மாவை சேர்த்து  உருட்டினால் கரைந்து போகாது.

9.தோசை மாவு புளித்து விட்டால் ஒரு டம்ளர் பால் கலந்தால் புளிப்பை போக்கி விடும்.

10.தோசை மாவுடன் ஒரு கரண்டி அரிசி மாவு கலந்தால் தோசை கல்லில் ஒட்டாமல் வரும்.

வெள்ளி, 21 ஜூன், 2013

அழகு குறிப்புகள்

இன்று பீஸ் வாய்ஸ் பத்திரிகையில் எனது அழகு குறிப்புகளை வெளியிட்ட திரு.ரஹீம் அவர்களுக்கும் பீஸ் வாய்ஸ் இதழுக்கும் நெஞ்சார்ந்த நன்றி...



ஞாயிறு, 16 ஜூன், 2013

அழகு குறிப்புகள் - I


1. ஆமணக்கு எண்ணெய்  தடவி வர புருவம் அடர்த்தியாக வளரும்.

2. முளைக்கட்டிய கருப்பு கொண்டைக்கடலையை தினமும் ஒரு ஸ்பூன் சாப்பிட்டு வந்தால்  தலைமுடி நன்கு வளரும்.

3. தேங்காய்ப்பால் தடவி குளித்து வந்தால் நாளடைவில் செம்பட்டை முடி சரியாகும்.

4. பப்பாளிப்  பழத்தை மசித்து  பூசி  வர முகப்பொலிவு அதிகரிக்கும்.

5. துளசி இலை சாற்றை  முகப்பரு மேல் பூசி வந்தால் முகப்பரு மறையும்.

6. வாழைப்பழத்தோலை லேசாக சூடுபடுத்தி கண்களின் மேல் வைக்க கருவளையம் குறையும்.

7. உதட்டில் வெண்ணெய் தடவி வந்தால் ஷைனிங்காக இருக்கும்.

8. நகங்களில் சிதைவு ஏற்படாமலும், வெண்மையாகவும் இருக்க சூரியகாந்தி எண்ணெயை கை, கால் நகங்களில் தடவ வேண்டும்

9.  பாதாம் பருப்பை பாலில் அரைத்து இரவில் முகத்தில் தொடர்ந்து பூசி வந்தால் முகம் பொலிவு பெறும்.

10. முட்டையின் வெள்ளைகரு,தேன்,மாதுளை ஜூஸ்  மூன்றையும் கலந்து அரை மணி நேரம் முகத்தில் பூசிவிட்டு முகம் கழுவினால் முகத்தில் எண்ணெய் பசை குறையும்.

 11. பாதாம் பருப்பை அரைத்து  தேன், எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவிவர முகம் பளப்பளப்பாகும்.

12. சருமம் உலராமல் பளபளப்புடன் இருக்க, தினமும் பசும்பாலை தேய்த்துவிட்டு குளியுங்கள்.

13. .பாதாம் பருப்பு, பாலாடை, எலுமிச்சைப் பழச்சாறு ஆகியவற்றை சேர்த்து அரைத்து முகம் , கழுத்து ஆகிய பகுதிகளில் பூசி வந்தால் வறண்ட சருமம் மாறும்.

14. எலுமிச்சை பழச்சாறு,பன்னீர் மற்றும் தயிர் சேர்த்து கலந்து முகம் மற்றும் கழுத்தில் பூசி ஊற வைத்து பிறகு கழுவி வந்தால் முகம் பளபளப்பாகும்.

15. பாசிப் பருப்பை தேங்காய் பாலில் ஊறவைத்து அரைத்து அதனுடன் மஞ்சள் பொடியை சேர்த்து முகத்தில் பூசி வந்தால் முகம் மென்மையாக காணப்படும்.

16. கொத்தமல்லி மற்றும் மஞ்சள் பேஸ்ட் செய்து முகத்தில் தடவி வந்தால் கரும்புள்ளிகள் குறையும்.

17. ஒரு துண்டு வசம்பு எடுத்து திருநீற்றுப்பச்சிலை சாறு விட்டு அரைத்து தடவி வந்தால் முகப்பரு குறையும். சருமம் பளபளப்பாகும்.

18. பூந்திக் கொட்டையைக் தண்ணீரில் ஊற வைத்து  அந்த நுரையைக் கொண்டு நகங்களை கழுவினால் நகங்கள் பளிச்சென்றும் சுத்தமாகவும் காணப்படும்.

19. பாதாம் எண்ணெயை எடுத்து உடல் முழுவதும் தேய்த்து சிறிது நேரம் வைத்திருந்து பின்பு குளித்து வர சருமம் மென்மையாகும்.

20. சர்க்கரையுடன் சிறிது கிளிசரின் சேர்த்துக் தடவி வந்தால் உள்ளங்கை மென்மையாக மாறும்.

21. தாமரை, ரோஜா, ஆகிய மலர்களில் ஒன்றை எடுத்து அடிக்கடி கண்களில் ஒற்றிக் கொண்டால் கண் இமைகள் அழகுடன் காட்சியளிக்கும்.

22. முட்டையின் வெள்ளைக் கருவுடன் எலுமிச்சம் பழச்சாற்றை  கலந்து முகத்தில் தடவி  வந்தால் முக சுருக்கங்கள் குறையும்.

23. எலுமிச்சை பழச்சாறுடன் வெள்ளரிக்காய் சாறு கலந்து கரும்புள்ளி இருக்கும் இடத்தில் தடவி வந்தால் கரும்புள்ளிகள் குறையும்.

24. பாதாம் எண்ணெய் மற்றும் ஆலிவ் எண்ணெய் எடுத்து நன்றாக கலந்து தலையில் தேய்த்து நன்கு ஊறிய பிறகு தலைக்கு குளித்து வந்தால் பொடுகு குறையும்.

25. தேன் மற்றும் எலுமிச்சை பழச்சாறு கலந்து முகம் கழுவி வந்தால் தோல் சுருக்கம் குறைந்து பளபளப்பாகும்.

26. தயிரில் கசகசாவைச் சேர்த்து அரைத்து தினமும் இரவு படுக்கச் செல்லும் முன்பாக பூசி வந்தால் முகம் பளப்பளப்பாகும்.

27. முட்டையின் வெள்ளை கருவை எடுத்து நன்றாக கலக்கி உச்சந்தலை மற்றும் முடியில் தடவி அரை மணி நேரம் ஊற வைத்து பிறகு குளித்து வந்தால் முடி உதிர்வது குறையும்.

28. நெல்லிக்காயை சாறு எடுத்து அதனுடன் சிறிது இஞ்சிச்சாறு கலந்து தினமும் காலையில் குடித்து வந்தால் தேவையற்ற கொழுப்பு குறைந்து உடல் பருமன் குறையும்.

29. அதிமதுரத்தை பொடி செய்து அதனுடன் சிறிது குங்குமப்பூ சேர்த்து பால் விட்டு கலக்கி தலையில் தேய்த்து வந்தால் முடி உதிர்வது குறைந்து முடி வளரும். பொடுகு குறையும்.

30. பலாப்பழம் எடுத்து தண்ணீர் விட்டு அரைத்து அதனுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் முகம் பொலிவு பெற்று சதை போட்டு இளமை கூடும்

31. சம அளவு நெல்லிக்காய் சாறு, பாதாம் எண்ணெய் எடுத்து அதில் சிறிது எலுமிச்சைச்சாறு கலந்து இரவு தலையில் நன்றாக தேய்த்து காலையில் தலைக்கு குளித்து வந்தால் கூந்தல் கருப்பாகும்.

32. குங்குமப்பூவை பாலேட்டில் இரவு முழுவதும் ஊற வைத்து காலையில் எடுத்து நன்றாக பிசைந்து உதட்டில் தடவி வந்தால் உதட்டின் கருமை நிறம் மாறி உதடு சிவப்பாகும்.

33. ரோஸ்மேரி இலைகளை எடுத்து நீர் விட்டு நன்றாக காய்ச்சி பிறகு சிறிது நேரம் வைத்திருந்து வடிகட்டி இந்த நீரை கொண்டு தலையை அலசி வந்தால் முடி உதிர்வது குறையும்.

34.சோற்று கற்றாழை ஜெல்லுடன் வெள்ளரிக்காயை சேர்த்து நன்றாக அரைத்து கருவளையத்தின் மீது தடவினால் கருவளையம் குறையும்.

35. கேரட்டை நன்றாக துருவி போட்டு அதில் தேன் சேர்த்து நன்கு கலந்து சாப்பிட்டு வந்தால் உடல் பருமன் குறையும்.

36.மருதோன்றி காயை அரைத்து நகத்தில் தடவி வந்தால் நகம் வளரும்.

37.சந்தனத்தை நன்றாக பொடியாக்கி அதனுடன் பன்னீர் கலந்து கரும்புள்ளிகள் மீது தடவி வந்தால் கரும்புள்ளிகள் குறையும்.

38.  வெள்ளரிக்காயை  நன்கு மைய அரைத்து  கரும்புள்ளிகள் மீது தடவி வைத்து நன்கு காய்ந்ததும் குளிர்ந்த நீரால் கழுவி வந்தால் கரும்புள்ளிகள் குறையும்.

39. கசகசாவைச் சிறிது எடுத்து, பாலில் ஊறவைத்து அதை தலையில் தேய்த்து குளித்து வந்தால் பொடுகு குறையும்.

40 செம்பருத்தி இலையை அரைத்து சீயக்காய்த் தூளுடன் சேர்த்து தலைக்குத் தேய்த்துக் குளித்து வர தலையில் பொடுகு குறையும்.

 41.  மஞ்சள் கரிசலாங்கண்ணி இலை சாற்றை, தலையில் தேய்த்தால் முடி உதிர்வது குறையும்.

42.தினமும் பசு வெண்ணெய்யுடன் கறிவேப்பிலைப் பொடியையும் சேர்த்துக்  சாப்பிட்டு வந்தால் இளநரை குறையும்.

 43. .ஆலிவ் எண்ணெய்யை  தலையில் தேய்த்து குளித்து வந்தால் கூந்தல் மின்னும்.

44.  தினமும் காலையில் தண்ணீரில் தேன் கலந்து குடித்து வந்தால்
உடல் பளபளப்பாகும்.

45. சிறுபயறு, கடலை மாவு, தேன் கலந்து, குளித்து வர உடல் அழகு பெறும்.

46.அருகம்புல் சாற்றில் மஞ்சள் கலந்து கால்களில் தேய்த்தால்  கால்களின் கடினத்தன்மை குறையும்.

47. ஆலிவ் எண்ணெயில் ஒரு முட்டை கலந்து தலைக்கு தேய்த்து குளித்து வந்தால் தலைமுடிஉதிர்வது குறையும்.

48. தர்ப்பூசணி  பழத்தின் அடியில் இருக்கும் வெள்ளை பகுதியினை கால்களுக்கு தேய்க்க கால்கள் மிருதுவாக மாறும்.


 49. தயிர்,  முட்டை,  எலுமிச்சை சாறு கலந்து  தேய்த்துக் குளிக்க பொடுகு குறையும்.

50 திராட்சை சாற்றை மசாஜ் செய்ய  கழுத்திலுள்ள கருமை குறைந்து, கழுத்து அழகாகும்.

51.  பீட்ரூட்டை உதட்டில் அடிக்கடி அழுத்தித் தேய்த்து வர இதழ்கள் சிவக்கும்.

52. தர்பூசணி பழச்சாறு, பயித்தமாவு இரண்டையும் கலந்த கலவையை முகத்தில் பூசி வந்தால் முகம்  புதுப்பொலிவு பெறும்.

53.எலுமிச்சைச் சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் பற்கள் பளிச்சென மாறும்.

54. தினமும் இரவில் புருவங்களில் ஆலிவ் எண்ணெயை தடவிக் கொண்டு படுத்தால் புருவங்கள் மிருதுவாகவும்,வசீகரமாகவும்இருக்கும்.

 55. பாதாம் பருப்புகளை பாலுடன் சேர்த்து நன்றாக அரைத்து கண்களைச் சுற்றி பேக் போடுவதால் கண்களில் உள்ள கருவளையம் மறையும்.

56. எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலந்து தடவினால், முகத்தில்  கரும்புள்ளிகள் குறையும்.

57. கிளிசரின் மற்றும் ரோஸ் வாட்டர் கொண்ட கலவையை உதடு வெடிப்பின் மீது பூசி வந்தால் வெடிப்புகள் மறைந்து உதடுகள் மென்மையாகும்.

58. பாலாடை குங்குமப் பூ கலந்து கழுத்தில் தடவி 30 நிமிடம் கழித்து கழுவினால் சிறுசிறு கரும்புள்ளிகள் மறையும்.

59. பாதாம் எண்ணெயுடன் தேன் கலந்து நன்றாகக் குழைத்து முகத்தில் பூசி வந்தால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் முகம் பிரகாசமாகும்.

60.மா மரத்தின் இலையை எடுத்து அதன் பாலைக் கால் வெடிப்பில் பூசி வந்தால் கால் வெடிப்பு குறையும்.

61. ஆலிவ் எண்ணெய்யை லேசாக சூடாக்கி விரல்களின் மீது தேய்த்து ஊற வைத்தால் நகங்கள் உடையாமல் இருக்கும்.

62 நெல்லிக்காயை பாலில் அரைத்து பிழிந்து சாறு எடுத்து கொதிக்க வைத்து தேங்காய் எண்ணெயில் கலந்து தடவி வந்தால் முடி நன்றாக வளரும்.

63. துளசி இலையுடன்  கற்பூரம் சேர்த்து அரைத்து முகப்பரு மேல் பூசி வந்தால் முகப்பரு குறையும்.

64. ஆலிவ் எண்ணெய்யை லேசாக சூடாக்கி விரல்களின் மீது தேய்த்து ஊற வைத்தால் நகங்கள் உடையாமல் இருக்கும்.

வெள்ளி, 31 மே, 2013

விதி

சிறுகதை
எழுதியவர் பிரபாவதி.
கோ 

அவள் தனது ஒன்றரை வயது பட்சிளம் குழந்தையை தனது முதுகில் அவள் சேலையால்  கட்டிக் கொண்டு பிச்சை எடுத்துக் கொண்டிருந்தாள் .

சிக்னலில் வந்து நிற்கும் ஒவ்வொரு வாகனமாக சென்று பிச்சை கேட்டுக் கொண்டிருந்தாள்.அவள் அழுக்கு துணிகளில் இருந்து வரும் வாடையை கண்டு சிலர் முகம் சுளித்துக் கொண்டாலும்,சிலர் அவள் முதுகில் துவண்டு கிடந்த பச்சை குழந்தையை பார்த்து இரக்கப்பட்டு பிச்சைப் போட்டார்கள்.

கால் கடுக்கக் ஓடி ஓடி பிச்சை எடுத்தாலும் அன்று அவளுக்கு சொற்பமான வருமானமே கிடைத்தது.அந்த சில்லறையை எடுத்துக் கொண்டு சாலையோர டீ கடையில் தனது குழந்தைக்கு மட்டும் பாலும் பட்டர் பிஸ்கட் டும் வாங்கிக் கொண்டாள்.

பசியில் வாடிக் கிடந்த தனது குழந்தைக்கு அந்த பிஸ்கட்டு பொட்டலத்தை பிரித்து அதை பாலில் தோய்த்து ஊட்டினாள்.அதை ஆர்வமாக சாப்பிட்ட குழந்தை கண் அயர்ந்தது.

குழந்தையின் பசியை போக்கிய திருப்தியுடன் அருகில் இருந்த தெரு குழாயில் தண்ணிர் குடித்துவிட்டு வந்து தனது குழந்தையின் அருகில் சுருண்டு படுத்துக் கொண்டாள்.

மறுநாள் செய்திதாளில் : "அடையாளம் தெரியாத வாகனம் மோதி சாலையோரம் துங்கிக் கொண்டிருந்த தாயும் சேயும் பலி"

----------------------------முற்றும் -------------------------

புதன், 8 மே, 2013

ஜாதகம்


சென்ற மாத "மகாகவி"  மாத இதழில் வெளியான எனது கதை. வெளியிட்ட ஆசிரியருக்கு நெஞ்சார்ந்த நன்றி.




சிறுகதை
எழுதியவர் பிரபாவதி.கோ 


ஜிகு ஜிகு என்று கண்ணை பறிக்கும் வண்ணத்தில் சிலுக்கு சட்டை அணிந்து வந்த ரமேஷை பார்த்து "என்னடா மச்சான்,இன்னைக்கு பச்சை கலரு சிங்குசானு  சட்டை போட்டு வந்திருக்கே?"என்று கிண்டலடித்தான் சுனில்.

" என் ராசிக்கு இன்னைக்கு பச்சை கலர் சட்டை போட்டா நல்லதுன்னு காலைல ராசி பலன் நிகழ்ச்சியில பார்த்தேன் அதான் மச்சான் "என்று பதிலளித்தான்.

'ஏன்டா ,ஏற்கனவே கலர் கலரா கல்ல பொருக்கி கைல மோதிரமா மாட்டியிருக்கே.அது போதாதுன்னு இப்போ இது வேறயா? இந்த ஜாதகம், ஜோசியம் எல்லாம் வெறும் ஹம்பக்.இதை எல்லாம் நம்பினா ஏமாற்றம் தான் மிஞ்சும்.இத நீ எப்போ தான் புரிஞ்சுக்க போறியோ "என்று அங்கலாய்த்தான்.

மறுநாள் ஆபீசுக்கு சோர்வாக வந்த ரமேஷை பார்த்த சுனில்

" என்ன மச்சான், இன்னைக்கு ரொம்ப டல்லா இருக்கே ஏதாவது பிரச்சனையா  ?" என்று அக்கறையோடு விசாரித்தான்.

" இன்னைக்கு காலையில எனக்கு பெண் குழந்தை பிறந்திரிச்சுனு ஊரிலிருந்து போன் பண்ணங்க" உற்சாகமற்ற குரலில் பதிலளித்தான்.

"  அட வாழ்த்துக்கள் மச்சான். இவ்வளவு சந்தோஷமான விஷயத்த இப்படி சோகமாவா சொல்றது. சரி ட்ரீட் எங்கே? உற்சாகமாக கேட்டான்.

"அட நீ வேற சும்மா இருப்பா.நானே நொந்து போயிருக்கேன்" என்று சலித்துக் கொண்டான்"

"என்னடா ஆச்சு? தாயும் குழந்தையும் நலம் தானே?" என்றான்.

"ஹ்ம்ம்"என்று தலையாட்டினான்.

"அப்போ ஏண்டா இப்படி எதையோ பறிகொடுத்த மாதிரி சோகமா இருக்கே?

"ஜாதகப்படி எனக்கு முதல் குழந்தை ஆண் தான் பிறக்கும்னு ரொம்ப நம்பிக்கையோட வீட்ல எல்லோரும் எதிர்பார்த்திருந்தோம்.ஆனால் இப்படி ஆயிடுச்சு " என்று ஏமாற்றம் கலந்த குரலில் சொன்னான்.

"அடச்சா...நான் என்னமோ ஏதோனு பயந்து போயிட்டேன். இதுக்கு தானா மூஞ்சிய இப்படி டல்லா வெச்சிருக்கே? அதான் ஜாதகம் பொய்யுனு தெரிஞ்சுகிட்ட இல்ல விடுடா.பிறந்தது எந்த குழந்தையா இருந்தா என்ன?இந்த குழந்தையோட பிறப்பால உனக்கு அப்பா என்கிற அந்தஸ்து கிடைத்திருக்கு.அந்த சந்தோசத்த கொண்டாடாம இப்படி ஜாதகம் ஜோசியம்னு புலம்புறியே"என்று கடிந்து கொண்டான்.

"அட ஆமாம் இல்ல,நான் அப்பா ஆகிட்டேன்  இல்ல.தேங்க்ஸ்டா  மச்சான். நான் இப்பவே ஊருக்கு கிளம்புறேன்.குழந்தை பிறந்த நேரம் எப்படி இருக்குனு ஜாதகம் எழுத சொல்லணும்.சார் வந்தா இந்த விஷயத்தை சொல்லி எனக்கு இரண்டு நாள் லீவு சொல்லிடு.நான் ஊர்லிருந்து வந்த பிறகு உனக்கு ட்ரீட் தறேன்"என்று கூறி புறப்பட்டவனை வியப்புடன் பார்த்தபடி இருந்தான் சுனில்...

                                                      ----- முற்றும் -----


Figurative Painting

 Heloo friends welcome to my blog. Herafter i would lke to share my creative work in this blog. so i request everyone to check out my work a...