செவ்வாய், 25 ஏப்ரல், 2023

புத்திசாலி யார்???

ஒரு முனிவரிடம் இரண்டு சீடர்கள் இருந்தனர். இருவரும் பலசாலிகள், புத்திசாலிகள். ஒருமுறை தங்களில் யார் புத்திசாலி என்பதில் இவர்களுக்குள் சண்டை ஏற்பட்டது. விஷயம் முனிவரிடம் வந்தது. 

அவர் சீடர்களிடம்,  

"சீடர்களே! இன்று ஏனோ எனக்கு அதிகமாகப் பசிக்கிறது. சமையல் முடிய தாமதாமாகும். அதோ! இரண்டு பேரும் அதோ அந்த மரத்தில் இருக்கும் பழங்களைப் பறித்து வாருங்கள்"  என்றார்.

குருவிடம் மிகவும் பணிவாக நடந்து கொள்ளும் அந்த சீடர்கள் மரத்தை நோக்கி ஓடினர். மரத்தை நெருங்க முடியாமல், முள்செடிகள் சுற்றி நின்றன. முதல் சீடன் சற்று பின்னோக்கி வந்தான். பின்னர் முன்னோக்கி வேகமாக ஓடினான். ஒரே தாண்டில் மரத்தை தொட்டான். பழங்களை முடிந்தளவுக்கு பறித்தான். மீண்டும் ஒரே தாவில் குருவின் முன்னால் வந்து நின்று, பார்த்தீர்களா! கணநேரத்தில் கொண்டு வந்து விட்டேன், என்றான் பெருமையோடு.

இரண்டாமவன் ஒரு அரிவாளை எடுத்து வந்தான். முள்செடிகளை வெட்டி ஒரு பாதை அமைத்தான். அப்போது சில வழிப்போக்கர்கள் அலுப்போடு வந்தனர். அவர்கள் வெட்டப்பட்ட பாதை வழியே சென்று, பழங்களைப் பறித்து சாப்பிட்டனர். மரத்தடியில் படுத்து இளைப்பாறினர். சிஷ்யனும் தேவையான அளவு பழங்களைப் பறித்து வந்தான்.

இப்போது முனிவர் முதல் சீடனிடம், இரண்டாவது சீடன் தான் அதிபுத்திசாலி என்றார்.

முதலாமவன் கோபப்பட்டான், 

"சுவாமி! இன்னும் போட்டியே வைக்கவில்லை. அதற்குள் அவனை எப்படி சிறந்தவன் என சொன்னீர்கள்?" என்றான்.

முனிவர் அவனிடம்,  "சிஷ்யா! நான் பழம் பறிக்கச் சொன்னதே ஒரு வகை போட்டி தான்! நீ மரத்தருகே தாவிக்குதித்து, பழத்தைப் பறித்தது சுயநலத்தையே காட்டுகிறது. ஏனெனில், அதை எனக்கு மட்டுமே தந்தாய். நான் மட்டுமே பலன் அடைந்தேன்".

இரண்டாம் சீடனோ பாதையைச் சீரமைத்ததால், எனக்கு மட்டுமின்றி ஊராருக்கும் இன்னும் பல நாட்கள் பழங்கள் கிடைக்கும். எல்லாருக்கும் எல்லாம் கிடைக்கச் செய்பவனே அதிபுத்திசாலி, என்றார்.

இங்கே செயல் ஒன்று தான். ஆனால், செய்த விதத்தில் தான் வித்தியாசம்.

திங்கள், 24 ஏப்ரல், 2023

சவால்

ஒரு ஊர்ல ஒரு விவசாயி இருந்தார். அந்த விவசாயி குதிரை வளர்த்திருக்கிறார். அந்த குதிரை ஒரு நாள் காட்டுக்குள்ள ஓடிடுச்சு..

உடனே பக்கத்து வீட்டுக்காரர் வந்து, அச்சோ பாவம்.. நீ எம்புட்டு துரதிஷ்டசாலியாயிருக்கப் பாரு... உன்னிடம் இருந்த ஒரு குதிரையும் ஓடிப்போயிடுச்சு அப்படினு சொன்னாராம்.

ஆம்..இருக்கலாம் என்ற விவசாயி கடந்து போய்விட்டார்.

மறுநாள் காலையில் அந்த குதிரை காட்டிலிருந்து மூன்று குதிரைகளை அழைத்து வந்தது..

மீண்டும் பக்கத்து வீட்டுக்காரர் வந்தார்.. ஏய், நீ எம்புட்டு அதிஷ்டசாலி பாரப்பா.. ஒன்னுக்கு நாலா திரும்பி வந்திருக்கின்றது என்றார்..

இப்பொழுதும் விவசாயி ஆம்..இருக்கலாம் என்று கடந்துவிட்டார்.

மறுநாள், புதிதாக வந்த குதிரையை ஓட்டிப்பழகுகிறேன் என்று விவசாயின் மகன் கீழே விழுந்து கை கால்களை முறித்துக்கொண்டான்.

அப்பொழுதும் பக்கத்து வீட்டுக்காரர்.. என்ன உனக்கு சோதனைக்கு மேல் சோதனையாக வருது.. குதிரையால அதிஷ்டம் வரும்னு பார்த்தா.. என்னப்பா இப்படியாகிப்போச்சு என்றபடி நகர்ந்தார்..

விவசாயி எப்பொழுதும் போல் எந்த சலனமும் இல்லாமல்.. ஆம் என்றபடி கடந்தார்.

மறு தினம், இராணுவத்திற்கு ஊரிலுள்ள இளைஞர்களை வலுக்கட்டாயமாக வண்டியில் ஏற்றினர். விவசாயி மகனுக்கு அடிபட்டதால் அவனை விட்டுவிட்டனர். பக்கத்து வீட்டுகாரரின் மகன் வலுக்கட்டாயமாக இழுத்துச்செல்லப்பட்டான். 

இப்பொழுதும் பக்கத்து வீட்டுக்காரர் வந்தார்.. நீ அதிஷ்டசாலியாத்தான் இருப்பப்போல என்ற புலம்பலோடு நடந்தார்..

விவசாயி சற்றும் சலனமின்றி ஆம்.. இருக்கலாம் என்றபடி கடந்தார்.
நமக்கு இன்பமோ துன்பமோ இடைவெளி இல்லாம வந்துகிட்டுத்தான் இருக்கும். 

நம்ம அமைதியா இருந்தாலும் சுற்றியுள்ளோர் எதையாவது சொல்லி நம்ம அமைதிய ஆட்டிப்பார்க்கத்தான் செய்வார்கள்.

அதையும் தாண்டி.. அமைதியான வாழ்வு வாழ்றது தான் நமக்கான சவால்.

நித்தம் ஒரு சவால், அதைக் கடப்பதும் அதற்குள் கடப்பதும் அவரவர் கையில்..

கோபத்தை ஓரங்கட்டி அறிவைத் தூசிதட்டுனா போதும். ..!!!

ஞாயிறு, 23 ஏப்ரல், 2023

வரமா இல்லை சாபமா???

ஒரு பிச்சைக்காரன். கோவில் வாசலில் பிச்சையெடுப்பது அவனது வழக்கம். நல்ல குரல் வளத்துடன் பாடுவான்.

ஒரு நாள். பக்திப் பாடல்களை உருக்கமாக பாடிக்கொண்டிருந்தான். மகிழ்ந்துபோன கடவுள் அவன் முன் தோன்றினார். பிச்சைக்காரன் மகிழ்ந்துபோனான். வணங்கினான். கடவுள் பேசினார்.

‘பக்தா! உன் பக்தி என்னை கவர்ந்தது. உனக்கு ஏதாவது வரம் தர விரும்புகிறேன். என்ன வேண்டும் என்று கேள்!’ என்றார் கடவுள்
பிச்சைக்காரனுக்கு மகிழ்ச்சி.

‘கடவுளே மிக்க நன்றி. என்னுடைய வேண்டுதல் இன்றுதான் பலித்திருக்கிறது. நீங்கள் இரண்டு வரங்கள் அளிக்க வேண்டும்’ என்று வேண்டினான் பிச்சைக்காரன்.

‘சரி. தருகிறேன்’ என்றார் கடவுள்

‘எனக்கு இந்த பிச்சைக்கார வாழ்க்கை வெறுத்துப் போய்விட்டது. அதனால், முதலாவது வரத்தினால் என்னை இந்த நாட்டிலேயே பெரிய பணக்காரனாக மாற்றிவிடுங்கள்’ என்று கேட்டான்.

‘அப்படியே ஆகட்டும். இரண்டாவது வரத்தை கேள்’ என்றார் கடவுள்.

‘கடவுளே! இத்தனை காலம் எல்லோரும் பணக்காரர்களாக இருந்தார்கள். நான் ஏழையாக இருந்தேன். அதனால், இரண்டாவது வரத்தினால், இந்த நாட்டு மக்கள் அனைவரையும் ஏழையாக்கிவிடுங்கள்’ என்று கேட்டான்.

கடவுள் சிரித்துக்கொண்டே, ‘அப்படியே ஆகட்டும்’ என்று சொன்னார்.

பிச்சைக்காரனுக்கு மகிழ்ச்சி. கடவுளுக்கு நன்றி தெரிவித்தான்.

‘பக்தா! நீ கேட்ட வரங்களை வழங்கிவிட்டேன். ஆனால் ஒரு நிபந்தனை. இந்த வரங்கள் பத்து நாட்களுக்கு மட்டுமே நீடிக்கும். நாளை காலை விடியும்போது நீதான் இந்த நாட்டின் பெரிய பணக்காரன்’ என்று சொல்லிவிட்டு மறைந்தார் கடவுள்.

‘பத்து நாட்களுக்கு மட்டும் வரம் கொடுக்கும் இவரெல்லாம் ஒரு கடவுளா’ என்று வருத்தப்பட்டுக்கொண்டே நகர்ந்தான். இருந்தாலும் அவனுக்கு மகிழ்ச்சி.

அன்று இரவு முழுவதும் தூங்கவேயில்லை. சில்லறைக் காசுகளை சேமித்துவைக்கும் பெட்டியை திறந்து பார்த்தான். பத்து செப்புக்காசுகளே இருந்தது.
‘இன்றோடு நம் பிரச்னைகள் தீர்ந்தது. விடிந்ததும் பெட்டி நிறைய தங்கக் காசுகள் நிரம்பி வழியப்போகிறது. வசதியான வீடு ஒன்று வாங்க வேண்டும். குதிரையும், தேரும் வாங்க வேண்டும்’ என்றெல்லாம் கணக்குப் போட்டான். எப்பொழுது விடியும் என்று காத்திருந்தான்.
பொழுது விடிந்தது.
வேகமாக எழுந்து பெட்டியை திறந்து பார்த்தான். அதிர்ந்துபோனான். 

பெட்டியில் முதல் நாள் இருந்த அதே பத்து செப்புக்காசுகளே இருந்தது.

‘கடவுள் நம்மை ஏமாற்றிவிட்டாரா?’ என்று யோசித்தவாறு வீட்டுக்கு வெளியே வந்தான். நாடெங்கும் ஒரே பரபரப்பு. காரணம், ஒரே நேரத்தில் நாட்டில் இருந்த அனைவரின் பணம், ஆபரணங்கள் ஆகியவை காணாமல் போயிருந்தன. 


பிச்சைக்காரனுக்கு விஷயம் புரிந்தது. ‘நாட்டில் இருப்பவர்களிடம் ஒரு பைசாகூட இல்லை. அதனால், பத்து செப்புக்காசுகள் வைத்திருக்கும் தானே பணக்காரன்’.

ஆம், பிச்சைக்காரன் பணக்காரன் ஆனான்.

விடிந்ததும் வீட்டில் பணமழை பெய்யும் என்று நினைத்த பிச்சைகாரனுக்கு வருத்தமே மிஞ்சியது. தற்போது கிடைத்திருக்கும் இந்த பணக்கார பட்டத்தால் அவனுக்கு எந்த உபயோகமும் இல்லை. 

கோவில் வாசலுக்கு சென்று பிச்சை எடுக்கவும் வழியில்லை. காரணம் மக்களிடம் பணம் இல்லை.

அவன் யோசிக்கத் தொடங்கினான்.

‘நல்ல வேளை பத்து நாட்களில் மக்களிடம் பணம் வந்துவிடும். பிறகு நமக்கு பிச்சை கிடைக்கும். ஒருவேளை இதுவே நிரந்தரமாக இருந்தால் நம் நிலை என்னவாகும்? தப்பித்தேன். கடவுளுக்கு நன்றி’ என்றவாறு பத்து நாட்கள் முடியட்டும் என்று காத்திருந்தான்.


படித்ததில் ரசித்தது...

சனி, 22 ஏப்ரல், 2023

பொறுப்பு

பசியோடு ஓட்டலுக்குள் நுழைந்தேன்.

‘‘இதோ பார்… நாளையிலிருந்து இந்த அழுக்கு பேன்ட்டெல்லாம்
போட்டுட்டு வரக்கூடாது… பளிச்னு சுத்தமா இருக்கணும்’’
என்று இளம் வயது சர்வரை எச்சரித்துக்கொண்டு இருந்தார்
முதலாளி.

தலையாட்டிவிட்டு என்னிடம் வந்தவன், ‘‘என்ன சாப்பிடறீங்க?’’
என்றான்.

பின்னாலேயே வந்த முதலாளி, ‘‘வர்றவங்களுக்கு முதல்ல
வணக்கம் சொல்லுடா’’ என்று கோபப்பட்டார்.

இட்லி, சாம்பார் கொண்டுவரச் சொன்னேன்.

வரும் வழியில் இன்னொரு சர்வர் மேல் மோதி, சாம்பார் கிண்ணம்
கீழே விழுந்தது.

‘‘கொஞ்சமாவது பொறுப்பு இருக்கா உனக்கு…? இப்படி மேலும்
கீழுமா கொட்டினா, லாபம் எங்கிருந்து வரும்?’’ – மறுபடி முதலாளி
எரிந்து விழுந்தார்.

இட்லி சாப்பிட்டதும், ‘‘அவ்வளவுதானா சார்?’’ என்றான் சர்வர்.

‘‘டேய்… அறிவு கெட்டவனே! இன்னும் என்ன சாப்பிடறீங்கன்னு
கேளுடா!’’ என்று அவன் தலையில் குட்டினார்.

எனக்குப் பரிதாபமாய் இருந்தது. சாப்பிட்டு முடித்து பில்லுக்குப்
பணம் தரும்போது முதலாளியிடம் கேட்டேன். 

‘‘ஏங்க… வறுமை தாங்க முடியாம பொழைக்க வந்தவன்கிட்ட இப்படியா கடுமையா நடந்துக்கறது?’’

முதலாளி சிரித்தபடி சொன்னார்… ‘‘சார்! இவன் என் பையன்.
தனியா ஓட்டல் ஆரம்பிக்கணும்னு ஆசைப்பட்டான். அதான் நெளிவு
சுளிவை எல்லாம் கத்துக் கொடுக்கறேன்…’’

பையனும் சிரித்தான்.


படித்ததில் ரசித்தது...

வெள்ளி, 21 ஏப்ரல், 2023

பொறுமை

தொடர்ந்து சில ஆண்டுகளாக மழையே பெய்யவில்லை. அந்த ஊரில் கடும் பஞ்சம் நிலவியது. மக்கள் பசியால் வாடினர். நல்ல உள்ளம் படைத்த செல்வந்தர் ஒருவரிடம் அந்த ஊர் மக்கள் சென்றனர்.

“ஐயா! பெரியவர்களாகிய நாங்கள் எப்படியோ பசியைப் பொறுத்துக் கொள்கிறோம். சிறுவர், சிறுமியர்கள் என்ன செய்வர்? இந்த நிலையில் நீங்கள் கட்டாயம் உதவி செய்ய வேண்டும்…” என்று வேண்டினர்.

இளகிய உள்ளம் படைத்திருந்த அவர், ”இந்த ஊரில் குழந்தைகள் யாரும் பசியால் வாட வேண்டாம். ஆளுக்கொரு மோதகம் கிடைக்குமாறு செய்கிறேன். என் வீட்டிற்கு வந்து மோதகத்தை எடுத்துச் செல்லச் சொல்லுங்கள்!” என்றார்.

மாளிகை திரும்பிய அவர், தன் வேலைக்காரனை அழைத்தார். ”இந்த ஊரில் உள்ள குழந்தைகளின் எண்ணிக்கையைக் கணக்கெடுத்துக் கொள். ஆளுக்கொரு மோதகம் கிடைக்க வேண்டும். கூடவும் கூடாது, குறையவும் கூடாது. நாளையிலிருந்து மோதகங்களைக் கூடையில் சரியான எண்ணிக்கையில் வைத்துக்கொண்டு வீட்டிற்கு வெளியே இரு…” என்றார்.

மறுநாள், வேலைக்காரன் மோதகக் கூடையுடன் வெளியே வந்தான். அங்கே காத்திருந்த சிறுவர், சிறுமியர் அவனைச் சூழ்ந்து கொண்டனர். கூடையை அவர்கள் முன் வைத்தான் அவன்.

பெரிய மோதகத்தை எடுப்பதில் ஒவ்வொருவரும் போட்டி போட்டனர். ஆனால், ஒரே ஒரு சிறுமி மட்டும் அமைதியாக இருந்தாள். எல்லோரும் எடுத்துச் சென்றது போக, மிஞ்சி இருந்த சிறிய மோதகத்தை எடுத்துக் கொண்டு அங்கிருந்து மகிழ்ச்சியுடன் சென்றாள் அவள்.

இப்படியே தொடர்ந்து நான்கு நாட்கள் நிகழ்ந்தது. எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டிருந்தார் செல்வந்தர். ஐந்தாம் நாளும் அப்படியே நடந்தது. எஞ்சியிருந்த சிறிய மோதகத்தை எடுத்துக் கொண்டு புறப்பட்டாள் அந்த சிறுமி. தன் வீட்டிற்கு வந்தவள், தன் தாயிடம் அதைத் தந்தாள். அந்த மோதகத்தைப் பிய்த்தாள் தாய். அதற்குள் இருந்து ஒரு தங்கக்காசு கீழே விழுந்தது.

அந்தத் தங்கக் காசை எடுத்துக் கொண்டு செல்வந்தரின் வீட்டிற்கு வந்தாள் சிறுமி. “ஐயா! இது உங்கள் தங்கக் காசு. ரொட்டிக்குள் இருந்தது. பெற்றுக் கொள்ளுங்கள்!” என்றாள். அவள். 

“மகளே! உன் பெயர் என்ன?"  என்று கேட்டார் செல்வந்தர். சிறுமி தன் பெயர் கிருசாம்பாள் எனக் கூறினாள்.

"மகளே உன் பொறுமைக்கும், நற்பண்பிற்கும் நான் அளித்த பரிசே இந்தத் தங்கக் காசு. மகிழ்ச்சியுடன் இதை எடுத்துக் கொண்டு வீட்டிற்குச் செல்"  என்றார் செல்வந்தர்.

துள்ளிக் குதித்தபடி ஓடிய  அவள், நடந்ததை தன் தாயிடம் சொன்னாள்.

கதையின் நீதி.
நாமும் பொறுமையாகவும், நேர்மையாகவும் இருந்தால் பெரியோர்களின் பரிசில்களைப் பெறலாம்.


படித்ததில் ரசித்தது....

வியாழன், 20 ஏப்ரல், 2023

கட்டுப்பாடுகள்

விவசாயி ஒருவர் புதிதாக ஒரு ஆலமரக்கன்றை தனது தோட்டத்தில் நட்டு வைத்தார். அது காற்றில் அசைந்து ஒடிந்து விடாமல் இருக்க அருகில் ஒரு குச்சியை நட்டு வைத்து செடியை அதில் கட்டி வைத்தார். பிறகு அதை சுற்றி வலையால் வேலி அமைத்தார். நேரத்துக்கு நேரம் தண்ணீரும் உரமும் போடப்பட்டது.

இதைப் பார்த்த எதிரே இருந்த காட்டுச்செடி ஒன்று, " இப்படி ஒரு வாழ்க்கை தேவையா..?  எங்களை பார் நாங்கள் எவ்வளவு சுதந்திரமாக இருக்கிறோம். ஆனால் நீயோ, குச்சியால் கட்டப்பட்டு கூண்டுக்குள் அடைப்பட்டு கிடக்கிறாய்" என ஏளனம் செய்தது.

ஆலமரச்செடி யோசிக்க ஆரம்பித்தது. நானும் பிற செடிகளை போல சுதந்திரமாக வாழ்ந்தால் என்ன ? எப்படியாவது இந்த வாழ்க்கையில் இருந்து வெளி வர வேண்டும் என்று நினைத்து கொண்டிருக்கும் போதே,

மறுநாள் அந்த காட்டுச்செடி இருந்த இடம் முழுவதும் சுத்தம் செய்யப்பட்டது. அந்த காட்டுச்செடியும் வெட்டி தூக்கியெறியப்பட்டது.

அந்த வழியாக வந்த விவசாயியின் மகன் , " இது என்ன செடி அப்பா..? ஏன் வலையெல்லாம் போட்டு அடைச்சி வச்சிருக்கீங்க " என்று கேட்க,

இதுவா.. இது ஆலமரச்செடி, இது மற்ற செடி மாதிரி சீக்கிரமா வளர்ந்து சீக்கிரமா அழிஞ்சு போறது இல்ல. பல நூறு வருஷம் வாழ்ந்து பயன்படக்கூடியது. அதான் இதுக்கு இவ்வளவு பாதுகாப்பு என்றார் விவசாயி.

தன்னை கட்டி வைத்திருக்கும் குச்சியும், சுற்றியிருக்கும் வேலியும், நான் இன்னும் நன்றாக வளர்வதற்கு தானே தவிர, சுதந்திரத்தை பறிப்பதற்கு அல்ல என்பதை புரிந்து கொண்டது.

நீங்கள் ஆலமரமாய் வளர வேண்டுமென்றால் சில கசப்பான கட்டுப்பாடுகள் இருக்க தான் செய்யும்.


படித்ததில் ரசித்தது...

புதன், 19 ஏப்ரல், 2023

வலிமை

திருடன் ஒருவன் சர்க்கஸ் பார்க்கப் போனான்.
அதில் ஒரு நிகழ்ச்சி அவனைக் கவர்ந்தது.
ஒரு வளையத்தில் நெருப்பு எரிந்து கொண்டிருந்தது.ஒருவன் பாய்ந்து வந்து அனாயாசமாக அந்த வளையத்துக்குள் பாய்ந்து வெளிவந்தான்.

நிகழ்ச்சி முடிந்ததும் திருடன் அவனைப் பார்த்து,
''இங்கு உனக்கு எவ்வளவு வருமானம் கிடைக்கிறதோ அதைப்போல ஐந்து பங்கு தருகிறேன்.நீ என்னுடன் வா,''என்று கூற அவனும் சரியென்று கிளம்பினான். 

பின் அவனுக்குத் தனது தொழில் பற்றிக் கூறிவிட்டு முதல் முறையாக அவனை அழைத்துக் கொண்டு ஒரு வீட்டிற்குத் திருடப் போனான். 

அங்கு சுவற்றில் கன்னம் வைத்தான்.பின் சர்க்கஸ்காரனிடம் அந்த துவாரத்துக்குள் பாய்ந்து உள்ளே சென்று பொருட்களை எடுத்துக் கொண்டு வரச்சொன்னான். 

அந்த துவாரத்தின் உயரம் கிட்டத்தட்ட சர்க்கஸில் இருந்த வளையத்தின் உயரத்திற்கே இருந்தது.

இருந்தாலும் அவன் உடனே செயல்படவில்லை. அவன் தயங்கியவாறு நின்றிருந்தான். 

திருடன் காரணம் கேட்க அவன் சொன்னான்,

''அய்யா,என்னைத் தவறாக எடுத்துக் கொள்ளாதீர்கள். என்னால் இது முடியாது.சர்க்கஸில் என்னைச்சுற்றி ஆயிரக்கணக்கானோர் இருந்து என்னை உற்சாகப் படுத்திக் கொண்டிருப்பர். அவர்கள் தரும் உற்சாகத்திலேயே நான் அந்த வளையத்துக்குள் பாய்ந்து விடுவேன். அந்த சூழல் இங்கு இல்லை.எனவே என்னால் இங்கு துவாரத்துக்குள் நுழைவதை எண்ணிக்கூடப் பார்க்க முடியவில்லை.''அடுத்தவர் தரும் உற்சாகத்துக்கு அவ்வளவு வலிமை!



படித்ததில் ரசித்தது ....

செவ்வாய், 18 ஏப்ரல், 2023

நல்லதை கற்றுத் தருவோம்

ஒரு கால் இல்லாத இளைஞன் ஒருவன். அம்மாவுடன் வசித்து வருவான். 

கால் இல்லாத ஊனமும் தனிமையும் அவனை வாட்டும். 

ஒரு சமயம், 
அம்மாவோடு பேருந்தில் போகும்போது லேடீஸ் சீட்டில் உட்கார்ந்திருப்பான். 

ஒரு பெண்மணி அவனைக் கண்டபடி திட்டும். 

அவன் உடனே எழ, அவனுக்கு கால் இல்லாததைப் பார்த்து திட்டியவள் 'ஸாரி’ கேட்பாள். 

அது அவனுக்குப் பெரிய துயரத்தைத் தரும். 

ஒரு கட்டத்தில் அவன் தற்கொலை செய்ய முடிவெடுத்து, வீட்டுக்குப் பக்கத்தில் உள்ள ரயில்வே டிராக்கில் போய் படுத்து கிடக்கிறான். 

ரயில் வருகிற நேரம்...

ஒரு 'குஷ்டரோகி' பிச்சைக்காரன், அந்த இளைஞனை பார்த்து ஓடி வந்து காப்பாற்றி விடுகிறான். 

பின், பக்கத்தில் இருக்கும் ஒரு கல் மண்டபத்துக்கு அழைத்துப் போய் அந்த இளைஞனிடம் சொல்கிறான், "நான் ஒரு குஷ்டரோகி... எப்பிடி இருக்கேன்னு பார்த்தியா... இப்படி தான் அன்னைக்கு கூட ரயில்ல விழப்போன ஒரு கொழந்தையக் காப்பாத்தினேன்... அந்தம்மா வந்து கொழந்தைய வாங்கிட்டு நன்றி சொல்லாம என்னைத் திட்டிட்டுப் போனாங்க... அவ்வளவு அருவருப்பா இருக்கேன் நான். அப்படி பட்ட நானே உயிரோட இருக்கும் போது...

உனக்கெல்லாம் என்ன இந்த கால் ஊனம் பெரிய குறையா?...’ என அறிவுரை கூறி அந்த இளைஞனின் நம்பிக்கையை தூண்டி விடுகிறான். 

தற்கொலை முயற்சியை விட்டுவிட்டு வாழ்க்கையின் மீதான புதிய நம்பிக்கைகளோடு தூங்குகிறான் ஊனமுற்றவன்.

காலையில் பார்த்தால் ரயில்வே டிராக்கில் யாரோ விழுந்து செத்திருப்பார்கள். 

அந்த இளைஞன்தான் செத்துப்போய் விட்டான் எனப் பயந்து ஓடி வருகிறாள் அவன் அம்மா. 

"அம்மா... நான் இருக்கிறேன் அம்மா..." என அந்த இளைஞன் கத்திக்கொண்டே வருகிறான். 

ஆனால், அங்கே அந்த குஷ்டரோகி பிச்சைக்காரன் செத்துக்கிடக்கிறான்.

முந்தைய இரவு அந்த இளைஞன் தூங்கிய பிறகு அந்த பிச்சைக்காரன் "இப்படிப்பட்ட ஒருவனே இந்த சமூகத்தில் வாழக் கூச்சப்பட்டு சாக நினைக் கிறான்... நாம இவ்வளவு அவமானங்களுக்கு நடுவிலே இப்படி வாழ்கிறோமே..." என யோசித்ததினாலே தண்டவாளத்தில் குதித்திருப்பான்...

செத்துப்போன குஷ்டரோகியை பார்த்து அந்த இளைஞன் சொல்கிறான், "அம்மா...! அவன் எனக்கு வாழக் கத்துக்கொடுத்தான்... நான் அவனுக்கு சாகக் கத்துக் கொடுத்துட்டேன்...!" என கதறி அழுகிறான். 

ஆகவே நாம், நம் சக மனிதர்களுக்கு எதைக் கற்றுத் தரப்போகிறோம் என்பதில்தான் இருக்கிறது நம் வாழ்க்கையின் அர்த்தம்!

பக்தி

ஒருவன் அதிகாலை எழுந்து காலைக் கடன்களை முடித்து ஆற்றில் குளித்து அருகில் உள்ள கோவிலுக்கு செல்வதை வழக்கமாக வைத்திருந்தான். 

கோவிலில் இறைவன் முன்பு ஏதாவது கோரிக்கைகள் சொல்லியே வழிபடுவது வழக்கமாக இருந்தான். பலநாட்கள் இதைப்பார்த்த ஒரு பெரியவர் அவனை அழைத்து அவனிடம் ஒரு கதை சொன்னார்.

ஓர் தத்துவஞானி செருப்புக்கூட அணியாதவர். தினமும் கடைவீதி செல்வார். ஒவ்வொரு கடையிலும் சிறிது நேரம் நின்று பார்த்து விட்டு அடுத்த கடைக்கு செல்வார். எல்லாம் பார்ப்பதுடன் சரி. எதையும் வாங்கியதே இல்லை. எல்லாவற்றையும் பார்த்துவிட்டு வெறுமனே திரும்பி வந்து விடுவார்.

அவருடைய நண்பர் நீ ஏன் தினமும் கடைவீதி செல்கின்றீர் எனக் ஞானியிடம் கேட்க, அங்கு என்னென்ன பொருள்கள் விற்கின்றன என்பதைப் பார்க்க என்றார். நீங்கள் அந்த பொருள்களிலிருந்து எதையும் வாங்கி வந்ததாக இதுவரை தெரியவில்லையே என்பதற்கு ஞானி, “அங்கு விற்கப்படும் பொருட்கள் இல்லாமல் நான் எவ்வளவு நிறைவாக வாழ்ந்து கொண்டிருக்கின்றேன் என்பதைப் புரிந்து கொள்வதற்காக எனச் சொன்னார்.”

இந்தக் கதையை கேட்ட இளைஞன் இதை ஏன் என்னிடம் கூறுகின்றீர்கள் என்றான். அதற்கு பெரியவர் பக்தி என்பது உனக்கு என்ன தேவை என்பதை சொல்லிக் கொண்டிருக்க அல்ல. பக்தியின் மூலம் உனக்கு தேவையற்றதை தெரிந்து ஒதுக்குவதற்குத்தான் என்ற உண்மை நீ புரிந்து கொள்ள வேண்டும் என்றார்.

புத்தகங்களின் மகத்துவம்

புத்தகங்களின் மகத்துவம் பற்றிச் சொல்லும் உயர்ந்த கருத்துக்கள்: 

  • தன்னைத் துாக்கிலிட அழைத்தபோது, தான் படித்துக் கொண்டிருக்கும் புத்தகத்தை முடித்து விட்டு வருகிறேன் என் சாகும் தருவாயிலும் கூட புத்தகம் வாசித்தவர் மாவீரன் பகவத்சிங்.

  • மரண தண்டனை விதிக்கப்பட்டு நஞ்சு தனக்குக் கொடுக்கப்படும் வரை படித்துக் கொண்டே இருந்தாராம் கிரேக்க நாட்டு சிந்தனைாளர் சாக்ரட்டீஸ்.

  • வேறு எந்தச் சுதந்திரமும் வேண்டாம். சிறையில் பு்த்தக வாசிப்பை மட்டும் அனுமதிக்க வேண்டும் என்நாராம் நெல்சன் மண்டேலா.

  • ஒரு கோடி ரூபா கிடைத்தால் என்ன செய்வீர்கள் என்று கேட்டபோது, ஒரு நுாலகம் கட்டுவேன் என்று சொன்னாராம் காந்தியடிகள்.

  • ஒவ்வொரு படமும் நடிகக ஒப்புக் கொள்ளும்போது வரும் முன் பணத்தில் முதல் நுாறு டாலர்களுக்கு புத்தகம் வாங்குவாராம் சார்லி சாப்ளின்.

  • ஒரு குழந்தைக்கு நீங்கள் வாங்கித் தரும் அதி சிறந்த பரிசு ஒரு புத்தகந்தான் என்றார் வின்சன்ட் சேர்ச்சில்.

  • தான் மறைந்த பிறகு தனது சடலத்தின் மீது மலர் மாலைகள் வைக்க வேண்டாம். புத்தகங்கள் வைக்க வேண்டும் என்றாராம் ஜவஹர்லால் நேரு.

  • புத்தகத்தின் சில பக்கங்கள் பாக்கி இருப்பதால் அதை முடிக்கும்வரை அறுவைச் சிகிச்சையை தள்ளி வைக்கச் சொன்னாராம் அறிஞர் அண்ணா.

  • ஒரு நாளில் பன்னிரண்டு மணி நேரத்தை படிப்பதிலும், படித்ததைச் சிந்திப்பதிலும் செலவிட்டாராம் முன்னாள் குடியரசுத் தலைவர் டாகடர் ராதாகிருஷ்ணன்.

  • “கற்றனைத்துாறும் அறிவு“ என்றார் திருவள்ளுவர்.

  • ஒரு நுாலகம் திறக்கப்படும்போது, 100 சிறைச்சாலைகள் மூடப்படுகின்றன. என்றார் விவேகானந்தர்.

  • கைத்துப்பாக்கிகளை விட புத்தகங்களே பெரிய ஆயுதங்கள் என்றார் புரட்சியாளர் லெனின்.

மாற்றம்

ஒரு புகழ்பெற்ற ஞானியிடம் சிலர் சென்று,  

"நாங்கள் புண்ணிய யாத்திரை சென்று புனித நதியில் நீராடி வரலாம் என்று இருக்கிறோம்.  நீங்களும் எங்களோடு வந்தால் நன்றாக இருக்கும்" என அவரை அழைத்தார்கள்.

ஞானியோ, இப்போது வருவதற்கான சாத்தியம் இல்லை என்று கூறி விட்டு, 

அவர்களிடம் ஒரு பாகற்காயை தந்து,  ''எனக்காக ஒரு உதவி செய்யமுடியுமா?''  என்று அவர்களை பார்த்துக் கேட்டார்.

அவர்கள் ''என்ன செய்ய வேண்டும் கட்டளை இடுங்கள் மகராஜ்" என்றனர்.

''ரொம்ப பெரிய வேலை எல்லாம் இல்லை. நீங்கள் புனித நதியில் முழுகும் போதெல்லாம் , இந்த பாகற்காயையும் முழுக்கி என்னிடம் திரும்ப கொண்டு
வந்து இதை சேர்த்து விடுங்கள்'' என்றார். 

அவர்கள் ஞானி சொன்ன மாதிரியே செய்தனர்.

திரும்ப வந்து அவரிடம் அந்த பாகற்காயை பத்திரமாக ஒப்படைத்தனர்.

அவர் அந்த பாகற்காயை சிறு துண்டுகளாக நறுக்கி,  எல்லாருக்கும் ஒரு துண்டை கொடுத்தார். புனித நதியில் முழுகி வந்த பாகற்காய். இப்போ சாப்பிட்டுப் பாருங்க தித்திக்கும் என்றார். ஆர்வமுடன் வாங்கிய அன்பர்கள் வாயில் போட்டு மென்ற வேகத்தில் முகம் மாறியது. 

"தித்திக்கும்னு சொன்னீங்க..ஆனா கசக்குதே" என்றார்கள் .
ஞானியிடம் ஏமாற்றத்துடன்..!

"பார்த்தீர்களா....?  பாகற்காய் எத்தனை தான் நதியில் முழுகினாலும்,
 அதன் சுபாவத்தை மாற்றிக் கொள்ளவில்லை.  அதைப் போலவே, நாம் நமது தவறான செயல்களையும்,  தீய  பழக்கங்களையும்,  துர் குணங்களை மாற்றிக் கொள்ளாமல், எந்த புண்ணிய தீர்த்தத்தில் ஆயிரம் முறை முழுகினாலும்,  எந்த புண்ணிய ஸ்தலங்களுக்கோ 1008 முறை வலம் வந்து விழுந்து, விழுந்து வணங்கினாலும். எந்த பயனும் வந்து விடப் போவதில்லை. மாற்றங்கள், மனங்களிலும், குணங்களிலும் வந்தால் தான் வாழ்க்கை இனிமையாகும்" என்றார் அந்த ஞானி.




படித்ததில் ரசித்தது....

சனி, 15 ஏப்ரல், 2023

வைர வியாபாரி

வைர வியாபாரி ஒருவன் தன் வைரங்கள் அனைத்தையும் விற்றுவிட்டு பணத்தை ஒரு முட்டையில் கட்டிக்கொண்டு தன் சொந்த ஊருக்கு வந்துகொண்டிருந்தான். அவன் தன் ஊருக்கு செல்ல ஒரு ஆற்றை கடக்க வேண்டி இருந்தது. ஆனால் எதிர்பாராத விதமாக அந்த ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

வெள்ளத்தை பொருட்படுத்தாத வைர வியாபாரி நீரில் இறங்கி எப்படியாவது ஆற்றை கடந்து சென்றுவிடலாம் என்று எண்ணி அந்த ஆற்றில் இறங்கினான். அப்போது வெள்ள நீர் அவனை நிலை தடுமாற செய்தது. 

இதனால் அவன் தன் பண மூட்டையை வெள்ளத்தில் தவறவிட்டான். உடனே ஐயோ என் பண மூட்டையை வெள்ளம் அடித்து செல்கிறதே யாரேனும் காப்பாற்றுங்கள் என்று கதறினான்.

அந்த ஆற்றில் மீன் பிடித்துக்கொண்டிருந்த ஒரு மீனவனின் காதில் இந்த வைர வியாபாரியின் கதறல் சத்தம் கேட்டது. உடனே அவன் ஆற்றில் குதித்து கடுமையாக போராடி அந்த பணமூட்டையை எப்படியோ மீட்டு எடுத்துக்கொண்டு கரையை அடைந்தான்.

பின் இந்த பண முட்டையை காப்பாற்ற சொல்லி யாரோ கதறினீர்களே, நீங்கள் எங்கு இருக்கிறீர்கள் ? நான் உங்கள் பண முட்டையை மீட்டுக்கொண்டு வந்துவிட்டேன். வந்து பெற்றுக்கொள்ளுங்கள் என்று சத்தமாக அழைத்தான். ஆனால் வெகு நேரம் ஆகியும் யாரும் அதை பெற்றுக்கொள்ள வரவில்லை.

பிறகு தான் அவனுக்கு புரிந்தது, அந்த பண மூட்டைக்கு சொந்தக்காரர் ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டார் என்று. ஐயோ பாவம், அந்த பணக்காரர் இந்த பண முட்டைக்கு பதிலாக தன்னை காப்பாற்றுங்கள் என்று குரல் கொடுத்திருந்தால் இந்த பண மூட்டையை விடுத்து நான் அவரை காப்பாற்றி இருப்பேனே. ஆனால் அவர் இப்படி செய்துவிட்டாரே என்று அந்த மீனவன் வருந்தினான்.

இப்படி தான் நாமும் நம் தேவைகளை சில நேரங்களில் இறைவனிடம் சரியாக வேண்டாமல் வெறும் பணத்தை மட்டுமே வேண்டுகிறோம். அதனால் பல நேரங்களில் நாம் நம் வாழ்வில் நிம்மதியை இழக்க நேரிடுகிறது.



படித்ததில் ரசித்தது...

புதன், 12 ஏப்ரல், 2023

கவிதை

பறந்து விரிந்த வானத்தில்...

நான் மட்டும் 

பறக்க வழியின்றி....!
பிரபாவதி

   


செவ்வாய், 11 ஏப்ரல், 2023

நேசிக்க கற்றுக்கொள்


துறவி ஒருவரிடம் கேட்டாள் ஒரு பெண்......

" என் கணவர் நிறைய குறைகளோடு இருக்கிறார்...அவரோடு என்னால் இனி வாழ முடியாது...எனவே நான் அவரைவிட்டு விலகி விடட்டுமா?" என்றாள்.

அவளுக்கு நேரடியாக பதில் சொல்லாத துறவி...

"அம்மணி! இங்குள்ள செடிகளில் ஏதாவது ஒன்றை உனக்கு தர விரும்புகிறேன்...எது வேண்டும் ...கேள்?" என்றார்.

அப்பெண் ரோஜா செடியைக் கேட்டாள்...

" அதைப் பராமரிப்பது மிகவும் கடினம். அதோடு அதில் நிறைய முட்கள் வேறு இருக்கிறதே? இதுவா வேண்டும்?" என்றார் துறவி.

"எனக்கு ரோஜாவை மிகவும் பிடிக்கும்...அதனால் அதனிடம் உள்ள குறைகள் பெரிதாகத் தெரியாது.." என்றாள்.

புன்னகைத்த துறவி சொன்னார்:" வாழ்கையும் அப்படிதான்! பிறரை நேசிக்கக் கற்றுக் கொண்டால், அவர்களது குறை பெரிதாகத் தெரியாது". என்றார்.

திங்கள், 10 ஏப்ரல், 2023

யார் உனக்கு குரு?

ஒரு ஊரில் ஒரு ஞானி இருந்தார். ரொம்ப பெரிய ஞானி. மிகவும் வயதாகி விட்டது .கடைசி காலத்தில் அவரிடம் சில பேர் வந்தார்கள்.

 உங்கள் குரு யார் ? என்று கேட்டார்கள்.

 அவர் நிமிர்ந்து பார்த்தார். எனக்கு ஆயிரக்கணக்கான குருமார்கள் உண்டு. அவர்கள் பெயர் எல்லாம் சொல்ல வேண்டுமென்றால் காலம் போதாது. ஆனால் முக்கியமான மூன்று பேரைப் பற்றி மட்டும் உங்களுக்குச் சொல்கிறேன் என்றார்.

 அந்த மூன்று பேரில் ஒருவன் திருடன்.

ஒரு சமயம் ஒரு பாலைவனம் வழியாக நான் போய்க் கொண்டிருந்தேன். அப்போது வழி தவறி போய் ஒரு கிராமத்துக்கு போய்விட்டேன். அது இருட்டும் நேரம். நடு ராத்திரி ஊரே உறங்கிக் கிடந்தது. அந்த நேரத்தில் ஒரு ஆள் மட்டும் வீட்டு சுவற்றில் ஏதோ செய்து கொண்டிருந்தான். அவன் உள்ளே நுழைய முயற்சி செய்து கொண்டிருந்தான். 

அவனிடம் போய் நான் இன்றைக்கு இங்கே எங்கே தங்க முடியும் என்று கேட்டேன்.

 அதற்கு அவன் இந்த இரவில் அது ரொம்ப சிரமம். ஒரு திருடனுடன் உங்களால் தங்க முடியும் என்றால் நீங்கள் என்னோடு தங்கலாம் என்றான்.

 நான் அவனுடன் ஒரு மாதம் தங்கி இருந்தேன். ஒவ்வொரு நாள் இரவும் இப்போது நான் என்னுடைய வேலைக்கு போகிறேன் நீங்கள் ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டு போவான்.

 அவன் திரும்பி வந்தவுடன் உனக்கு ஏதாவது கிடைத்ததா? என்று கேட்பேன். அதற்கு அவன் இன்று ஒன்றும் கிடைக்கவில்லை. நாளைக்கு மறுபடியும் முயற்சி செய்வேன் என்பான். ஒருபோதும் அவன் நம்பிக்கை இழந்ததே கிடையாது. எப்போதும் சந்தோஷமாகவே இருந்தான்.

 நானும் ரொம்ப காலமாக தியானம் பண்ணிக் கொண்டிருந்தேன். ஆனால் எதுவும் நடக்கவில்லை. ஆனால் என்ன செய்தேன் தெரியுமா? மனது வருத்தப்படும். நம்பிக்கை இழந்து விடுவேன். அப்போதெல்லாம் இந்த திருடனுடைய விடாமுயற்சி தான் ஞாபகத்துக்கு வரும்.

என்னுடைய இரண்டாவது குரு ஒரு நாய்.

ஒரு சமயம் எனக்கு ரொம்ப தாகமாக இருந்தது. ஒரு நதியை நோக்கி போய்க்கொண்டிருந்தேன். அப்போது ஒரு நாயும் வந்தது. அதற்கும் தாகம். ஓடி வந்து ஆற்றில் பார்த்தது. அதனுடைய நிழல் ஆற்றில் தெரிந்தது. அதை பார்த்து பயந்துவிட்டது. அதாவது தன் சொந்த உருவத்தையே கண்டு பயந்துவிட்டது. அதை பார்த்து குரைத்தது. திரும்பி ஓடியது. ஆனாலும் அதற்கு தாகம் அதிகமாக இருந்ததனால் அது மறுபடியும் திரும்பி வந்தது. இப்படி சில தடவைகள் பண்ணியது. இருந்தாலும் கடைசியில் தண்ணீரில் குதித்தது.
இப்படி குதித்த உடனே அதன் உருவமும் மறைந்து விட்டது. 

இதை பார்த்து நான் என்ன புரிந்து கொண்டேன் என்றால், எவ்வளவுதான் பயம் இருந்தாலும் கூட ஒருத்தன் தைரியமாக காரியத்தில் இறங்க வேண்டும் என்பதை புரிந்து கொண்டேன். இந்த போதனை எனக்கு அந்த நாயிடம் இருந்து கிடைத்தது.

 என்னுடைய மூன்றாவது குரு யார் என்றால் அது ஒரு சின்ன குழந்தை. நான் ஒரு சமயம் ஒரு நகரத்துக்கு போனேன். அங்கே ஒரு குழந்தை எரிகிற மெழுகுவர்த்தி ஒன்றை எடுத்துக் கொண்டு வந்தது.

 நான் அந்த குழந்தையை பார்த்து வேடிக்கையாக கேட்டேன். ஏன் பாப்பா இந்த மெழுகுவர்த்தியை நீயாவை கொளுத்தினாயா என்று

 ஆமாம் என்றது அந்த குழந்தை.

 சரி இந்த மெழுகுவர்த்தி முதல் எரியாமல் இருந்தது. இப்போது எரிகிறது. இந்த மெழுகுவர்த்திக்கு வெளிச்சம் எங்கே இருந்து வந்தது என்று காட்ட முடியுமா என்று கேட்டேன்.

 அதற்கு அந்த குழந்தை சிரித்தது. இந்த மெழுகுவர்த்தியை ஊதி அணைத்து விட்டது. அதன் பிறகு என்னை பார்த்து கேட்டது இப்போ இந்த மெழுகுவத்தின் வெளிச்சம் போனதை பார்த்தீர்கள் அது எங்கே போனது என்று சொல்ல முடியுமா என்று இந்த குழந்தை இப்படி கேட்டதும் என்னிடம் இருந்து ஆணவம் அழிந்தது.

 நான் படித்ததெல்லாம் அந்த வினாடியில் சுக்கு நூறாகி விட்டது. எனது முட்டாள்தனத்தை நான் உணர்ந்தேன் என்றார் ஞானி. 

இதனால் நாம் இன்னாரிடமிருந்து இதைத்தான் கற்றுக் கொள்ள வேண்டும் என்பதில்லை யாரிடமிருந்தும் எதையும் கற்றுக் கொள்ளலாம்.

வடை போச்சே

ஒருவனுக்கு ஒரு பயங்கரமான பிரச்சனை இருந்தது. அவன் தெரிந்தவர்களிடம் எல்லாம் விசாரித்து ஒரு நல்ல மனநல மருத்துவரை சந்திக்க சென்றான்.

 அவன் மருத்துவரை சந்தித்து "டாக்டர் ஐயா, எனக்கு தினமும் படுக்கும் பொழுது கட்டிலுக்கு கீழே யாரோ ஒரு ஆள் படுத்து இருப்பது போல் தோன்றுகிறது. ஆனால் எட்டிப் பார்த்தால் அப்படி யாரும் அங்கு இல்லை இப்படி தினமும் தோன்றுவதால் பயத்தில் என்னால் தூங்கவே முடிவதில்லை" என்றான். 

அதற்கு டாக்டர் சொன்னார் "தம்பி உங்கள் பிரச்சினையை சரி செய்து விடலாம். வாரத்திற்கு ஒருமுறை வீதம் ஐந்து செசன்ஸ் என்னிடம் வாங்க சரி பண்ணிடலாம்" என்றார் டாக்டர்.

 மிகவும் மகிழ்ச்சி அடைந்த அவன் "ரொம்ப நன்றி டாக்டர் எவ்வளவு செலவாகும்" என்று கேட்டான்.

 பதிலுக்கு டாக்டர் "ஒரு செசன்ஸ்க்கு வெறும் 2000 ரூபாய் தான். வழக்கமாக நான் 2500 ரூபாய் வாங்குவேன் ஆனால் நீங்களோ நம்ம ஊருன்னு சொல்லிட்டீங்க அதனால உங்களுக்கு வெறும் 2000 ரூபாய் மட்டும் தான்" என்று புன்னகை புரிந்தார்.

"அப்படியா டாக்டர் அப்ப நான் அப்புறமா வரேன்" என்று சொல்லிவிட்டு சென்றான்.

 ஆனால் அவன் வரவே இல்லை.

 இரண்டு மாதம் கழித்து ஒரு தேனீர் கடையில் தேனீர் அருந்த சென்ற போது அவனை சந்தித்தார் டாக்டர்.

"என்ன தம்பி அப்புறம் வரவே இல்லை?" என்று டாக்டர் கேட்டார்.

" ஓ அதுவா அந்த பிரச்சனை சரியாயிடுச்சு" என்றான் அவன்.

அதைக் கேட்ட டாக்டர் "அது எப்படி சரி ஆச்சு?" என்று ஆவலுடன் கேட்டார்

"அது ஒன்னும் இல்ல டாக்டர், நம்ம பக்கத்து கடை அண்ணாச்சி ஒரு ஐடியா சொன்னார். பிரச்சினை சரியாயிடுச்சு. அது மட்டும் இல்ல நல்ல லாபமும் வந்துச்சு" என்றான் அவன்.

 அதைக் கேட்டதும் டாக்டருக்கு குழப்பமாக இருந்தது. பிரச்சனை சரியாயிடுச்சு சரி ஆனால் லாபம் எப்படி வந்துச்சு என்று தெரிந்து கொள்ள ஆசைப்பட்டார். உடனே அவனிடம் "என்ன தம்பி சொல்றீங்க? கொஞ்சம் விவரமா சொல்லுங்க" என்றார்.

" அது ஒன்னும் இல்லை டாக்டர், நம்ம அண்ணாச்சி கிட்ட போய் என்னோட பிரச்சனை பற்றி சொன்னேன்..
உடனே அதற்கு அவர் கட்டிலை விற்றுவிட்டு ஒரு பாய் வாங்கி தரையில் விரிச்சி படுத்து தூங்கு என்று சொன்னார்.

 நானும் 2000 ரூபாய்க்கு கட்டிலை விற்று விட்டு 200 ரூபாய்க்கு பாய் வாங்கி விட்டேன். இப்பொழுது பாயில் தான் படுக்கிறேன். நல்ல தூக்கமும் வருது. எந்த பயமும் வரலை. லாபத்திற்கு லாபம்.  தூக்கத்திற்கு தூக்கம். சந்தோஷமா இருக்கேன்" என்று விளக்கமாக சொன்னான்.

அதைக்  கேட்ட டாக்டர் "அடடா வடை போச்சே"   என்ற வருத்தத்துடன் அங்கிருந்து சென்றுவிட்டார்.

இது கொஞ்சம் புதுசு

1) அமாவாசை மேகம் 
     அப்பாவி மழை 
     கடலில் பெய்யும். 

2) எந்த முட்டைக்குள் 
     எந்தப் பஞ்சு 
     எல்லாம் ஒரே கோழிக் குஞ்சு. 

3) மெய் 
     ஒரு பொய் 
     காற்றடைத்தப் பை.

4) எது இலையாகும் ?
     எது பூவாகும் ?
     யாருக்குத் தெரியும் ?

5) மூப்பின் அடிப்படையில் இல்லை
     சிவலோகப் பதவி. 
     எமலோகத்திலும் அரசியல்.

6) மயிலுக்குத் தேசிய பறவை
     எலிகளுக்குச்  சோதனைச்சாலை
     நாரதருக்குக் கோபம். 

7) வெறுங் காலைப்
     பதம் பார்க்கிறது.
     செருப்பால் மிதிபட்ட முள் .

8) எங்கள் நிறுவனத்திற்கு 
     எங்கும் கிளைகள் கிடையாது
     அறிவிக்கிறது மூங்கில் .

9) எங்கள் விரல்களில் கரும்புள்ளி 
     தேர்தலில் வென்றார் 
     பெரும்புள்ளி..

10) பறவைக்கு  இல்லை அச்சம்
       சோளக்காட்டுப் பொம்மைத் 
       தலையில் எச்சம்.

வெள்ளி, 7 ஏப்ரல், 2023

முயன்று பார்ப்போம்

கழுகு ஒன்று மரத்தின் உச்சியில் உள்ள ஒரு கிளையில் முட்டையிட்டு அதனை அடைகாத்து வந்தது.
 
ஒருநாள் உணவுக்காக அது கூட்டை விட்டு வெளியே பறந்த சமயத்தில் அடைகாத்து வைத்திருந்த முட்டைகளில் ஒன்று பலமாக வீசியக் காற்றின் காரணமாக மரத்திலிருந்து கீழே விழுந்தது.
 
அதிஷ்டவசமாக அந்த முட்டை உடையவில்லை. ஏனென்றால் அந்த மரத்தின் அடியில் ஒரு கோழியும் அடைகாத்து வந்திருக்கிறது. இந்தக் கழுகு முட்டை கோழி முட்டைகள் இருந்த இடத்திற்கு அருகே விழுந்தது ஆனால் முட்டைக்கு எந்தச் சேதாரமும் ஏற்படவில்லை. சிறிது நேரம் கழித்து அங்கு வந்த கோழி மரத்தில் இருந்து விழுந்த முட்டையையும் தன் முட்டை தான் என்று நினைத்து மற்ற முட்டைகளோடு சேர்த்து பக்குவமாக பாதுகாத்தது.
 
சில நாட்களுக்குப் பிறகு மரத்தின் உச்சியில் இருந்த கழுகு தன்னுடைய குஞ்சுகளை அழைத்துக் கொண்டு வேறு ஒரு பாதுகாப்பான இடத்திற்குப் பறந்து விட்டது. அதே சமயம் மரத்தின் அடியில் அடைகாத்தக் கோழியும் தன் குஞ்சுகளை அழைத்துக் கொண்டு குப்பைகள் நிறைந்த ஒரு பகுதிக்கு சென்று குப்பையைக் கிளறி அங்கிருந்த இரையைக் கொத்தி தின்றுக் கொண்டிருந்தது.

கூட்டத்தில் இருந்த கழுகும் மற்றக் கோழிகளை போலவே குப்பையைக் கீறிக் கொண்டிருந்தது.
 
ஒருநாள் வானத்தில் பறந்துக் கொண்டிருந்த மற்றக் கழுகுகளைப் பார்த்து கோழிகளோடு இருந்த கழுகு இன்னோரு கோழியைப் பார்த்து 
 
"நம்மளால அவுங்க மாதிரி வானத்துல பறக்க முடியாதா?" என்று கேட்டது
 
அதற்கு கோழி  "ஆண்டவன் அவுங்களுக்கு பறக்கின்ற திறமையைக் கொடுத்திருக்கான் நம்மளால அவ்வளவு உயரத்தில் பறப்பதற்கு வாய்ப்பே இல்லை " என்று சொன்னது
 
அதற்கு கழுகு கேட்டதாம் "நான் வேணும்னா முயற்சி பண்ணி பார்க்கவா "
என்றுக் கழுகு கேட்க அதற்கு கோழி "உன்னாலயும் என்னாலயும் எப்பவுமே அவுங்கள மாதிரி பறக்க முடியாது.
 
நாம வாழ்க்கை முழுவதும் உணவுக்காக இந்த மாதிரி குப்பையை தான் கீறிக்கிட்டே இருக்கணும் " என்று சொல்லி விட்டு நகர்ந்தது.
 
கோழி சொன்னது அனைத்தையும் உண்மை என்று நம்பிய கழுகு அதன் பிறகு பறப்பதற்கு முயற்சியே செய்யாமல் தன் வாழ்நாள் முழுவதும் கோழியைப் போலவே வாழ்ந்ததாம்.
 
 
நம்மில் பலரும் கழுகைப் போல பறக்கும் திறமைக் கொண்டவர்களாக இருக்கின்றோம் ஆனால் உரிய சந்தர்ப்பத்தில் தன்னம்பிக்கையோடு முயற்சி செய்யாமல் இருந்தோமேயானால் கடைசி வரை நம் வாழ்வும் இந்தக் கதையில் வரும் "கோழியைப் போல் வாழும் கழுகு போல" ஆகிவிடும்.

புதன், 5 ஏப்ரல், 2023

மந்திரக் குவலை


முன்னொரு காலத்தில் ஓர் அரசன் இருந்தான். அவன் மிகவும் முன் கோபக்காரன். தன் கெட்ட குணம் தெரிந்தும் அவனால் அதை மாற்றிக் கொள்ள முடியவில்லை. 

ஒரு நாள் தேவதை ஒன்று அவன் முன் தோன்றியது. பொன்னால் செய்த ஒரு குவலையை அவனிடம் கொடுத்தது. 

"உனக்குச் சினம் வரும்போதெல்லாம் இதில் மூன்று முறை தண்ணீர் 
நிரப்பிக் குடி. பிறகு சினமே வராது" என்று கூறி மறைந்தது தேவதை.

அப்போதிருந்தே அரசன் அப்படிச் செய்யத் தொடங்கினான். சில நாட்களில் அவன் சினம் அவனை விட்டு விலகியது. 

பல நாட்கள் சென்றன. 

மீண்டும் ஒரு நாள் தேவதை அவன்முன் தோன்றியது. மந்திரக் குவலை கொடுத்ததற்காக பலமுறை அதற்கு நன்றி கூறித் தன் மகிழ்ச்சியைத் தெரிவித்தான் மன்னன். 

"மன்னனே உன்னை ஏமாற்ற நான் விரும்பவில்லை. அது மந்திரக்குவலை அல்ல. சாதாரணமானது தான். சினம் வரும்போது சிந்திக்க நேரம் இருக்காது. சிந்தனை வந்தால் சினம் தானே குறையும். 

தண்ணீரை மூன்று முறை ஊற்றிக் குடிக்கும் போது நேரம் கிடைக்கிறது. அப்போது சிந்திக்க முடிவதால் புலன்கள் அமைதி பெறுகின்றன. ஆத்திரம் நியாயத்திற்குத் தன் இடத்தைக் கொடுக்கிறது" என்று கூறி மறைந்தது தேவதை.


படித்ததில் ரசித்தது....

ஜூலை 01

கிரிகோரியன் ஆண்டின் 182 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 183 ஆம் நாளாகும்.. . ஆண்டு முடிவிற்கு மேலும் 183 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

1770 – லெக்செல்லின் வால்வெள்ளி பூமிக்கு மிக்கிட்டவாக (0.0146 வா.அ  தூரம்) வந்தது.

1819 – யோகான் திராலெசு என்பவர் சிC/1819 என்1 என்ற வால்வெள்ளியை  அவதானித்தார்.

1825 – ஐக்கிய இராச்சிய  நாணயங்கள் இலங்கையில்  அங்கீகரிக்கப்பட்ட நாணயங்கள்  ஆக்கப்பட்டன.

1837 – இங்கிலாந்து, மற்றும் வேல்சில்  பிறப்பு, இறப்பு, திருமணப் பதிவு நடைமுறைக்கு வந்தது.

1843 – மதராஸ் வங்கி  ஆரம்பிக்கப்பட்டது.

1858 – சார்லஸ் டார்வின், ஆல்பிரடு அரசல் வாலேசு ஆகியோரின் படிவளர்ச்சிக் கொள்கை பற்றிய ஆய்வுக் கட்டுரைகள் இலண்டன் லின்னியன் சபையில் படிக்கப்பட்டன.

1862 – உருசிய மாநில நூலகம்  திறக்கப்பட்டது.

1863 – நெதர்லாந்தினால் அடிமை முறை தமது நாட்டில் ஒழிக்கப்பட்டதை சுரிநாம் கொண்டாடியது.

1863 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: கெட்டிசுபெர்க்கு சண்டை  ஆரம்பமானது.

1867 – பிரித்தானிய வட அமெரிக்க சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. கனடாவில் கனடியக் கூட்டமைப்பு, நடுவண் மேலாட்சி அரசு முறை கனடிய அரசையலமைப்பில்  கொண்டுவரப்பட்டது. கனடாவின் முதலாவது பிரதமராக சர் ஜோன் ஏ. மெக்டொனால்டு பதவியேற்றார். இந்நாள் கனடா நாள் என்ற பெயரில் விடுமுறை நாளாகக் கொண்டாடப்படுகிறது.

1873 – இளவரசர் எட்வர்ட் தீவு கனடா கூட்டமைப்பில் இணைந்தது.

1874 – முதலாவது வணிகரீதியிலான தட்டச்சுக் கருவி விற்பனைக்கு வந்தது.

1881 – உலகின் முதலாவது பன்னாட்டு தொலைபேசி அழைப்பு கனடாவ்சின் சென். ஸ்டீவன் நகருக்கும், அமெரிக்காவின் கலைசு நகருக்கும் இடையில் ஏற்படுத்தப்பட்டது.[1]

1890 – கனடாவும் பெர்முடாவும் தந்திச் சேவையில் இணைந்தன.

1903 – முதலாவது தூர் த பிரான்சு மிதிவண்டிப் பந்தயம் இடம்பெற்றது.

1916 – முதல் உலகப் போர்: பிரான்சின்  சோம் நகரில் இடம்பெற்ற போரில் 19,000 பிரித்தானியப் படையினர் கொல்லப்பட்டனர்.

1921 – சீனப் பொதுவுடமைக் கட்சி  ஆரம்பிக்கப்பட்டது.

1923 – கனடிய நாடாளுமன்றம் சீனக்  குடியேற்றத்தை தடைச் செய்தது.

1931 – யுனைடெட் ஏர்லைன்ஸ்  போயிங் ஏர் டிரான்ஸ்போர்ட் என்ற பெயரில் சேவையை ஆரம்பித்தது.

1932 – ஆஸ்திரேலிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் ஆரம்பிக்கப்பட்டது.

1933 – வில்லி போஸ்ட் உலகை முதன் முதலில் தனியே சுற்றி வந்து சாதனை படைத்தார். 15,596 மைல்களை இவர் ஏழு நாட்கள், 18 மணி, 45 நிமிடங்களில் சுற்றி வந்தார்.

1942 – இரண்டாம் உலகப் போர்: முதலாம் அல்-அலமைன் சண்டை  ஆரம்பமானது.

1947 – இந்தியாவுக்கு முழு விடுதலையை ஆகத்து 15 ஆம் நாளன்று வழங்க பிரித்தானிய  நாடாளுமன்றம் முடிவெடுத்தது.

1948 – முகம்மது அலி ஜின்னா  பாக்கித்தானின் நடுவண் வங்கியான பாக்கித்தானிய அரசு வங்கியை  ஆரம்பித்தார்.

1949 – கொச்சி, திருவிதாங்கூர்  சமத்தானங்கள் திருவாங்கூர்-கொச்சி என்ற ஒரே மாநிலமாக (பின்னைய கேரளம்) இணைந்தன. ஆயிரம் ஆண்டுகள் பழமையான கொச்சி இராச்சியம் முடிவுக்கு வந்தது.

1958 – கனடிய ஒலிபரப்பு கூட்டுத்தாபனம் தொலைக்காட்சி  ஒளிபரப்பை கனடா முழுவதும் நுண்ணலை மூலமாக வழங்கியது.

1959 – பன்னாட்டு யார், பவுண்டு  மற்றும் அங்குலம், மைல், அவுன்சு  ஆகியவற்றுக்கான குறிப்பிட்ட அளவைகள் அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், மற்றும் பொதுநலவாய  நாடுகளில் அமுலுக்கு வந்தது.

1960 – கானா குடியரசு ஆனது. குவாமே நிக்ரூமா நாட்டின் முதலாவது அரசுத்தலைவர் ஆனார்.

1960 – இத்தாலியிடம் இருந்து சோமாலியா விடுதலை பெற்றது.

1962 – ருவாண்டா, புருண்டி விடுதலை பெற்றன.

1963 – சிப் குறியீடுகள் ஐக்கிய அமெரிக்காவில் அறிமுகப்படுத்தப்பட்டன.

1966 – கனடாவின் முதலாவது வண்ணத் தொலைக்காட்சி சேவை ரொறன்ரோவில் ஆரம்பிக்கப்பட்டது.

1967 – தேய்வழிவுப் போர்  தொடங்கப்பட்டது.

1968 – அணுக்கரு ஆயுதப் பரவல் தடுப்பு ஒப்பந்தம் வாசிங்டன், டி. சி., இலண்டன் மற்றும் மாஸ்கோ ஆகிய நகரங்களில் 62 நாடுகளால் கையெழுத்திடப்பட்டது.

1976 – போர்த்துகல் மதீராவுக்கு  சுயாட்சி வழங்கியது.

1978 – ஆத்திரேலியாவின் வட ஆட்புலம் சுயாட்சியுள்ள மாநிலமானது.

1980 – "ஓ கனடா" அதிகாரபூர்வமாக கனடாவின் நாட்டுப்பண்ணாக  அங்கீகரிக்கப்பட்டது.

1983 – வட கொரியாவின் இலியூசின் ஜெட் விமானம் கினி-பிசாவு நாட்டில் மலையில் மோதியதில், அதில் பயணம் செய்த அனைத்து 23 பேரும் உயிரிழந்தனர்.

1990 – செருமானிய மீளிணைவு: ஜெர்மன் சனநாயகக் குடியரசு  டொச்சு மார்க்கைத் தனது நாணயமாக ஏற்றுக் கொண்டது.

1991 – பனிப்போர்: வார்சா உடன்பாடு பிராகா நகரில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் அதிகாரபூர்வமாகக் கலைக்கப்பட்டது.

1997 – ஆங்காங்கின் அதிகாரத்தை சீனா பொறுப்பெடுத்துக் கொண்டதன் மூலம் 156 ஆண்டுகால பிரித்தானியக் குடியேற்றவாத அரசு முடிவுக்கு வந்தது. பொறுப்புக் கொடுக்கும் நிகழ்வில் பிரித்தானியப் பிரதமர் டோனி பிளேர், சார்லசு, வேல்சு இளவரசர், சீனத் தலைவர் யான் சமீன், அமெரிக்க அரசுச் செயலர் மாடிலின் ஆல்பிரைட்  ஆகியோர் கலந்து கொண்டனர்.

2002 – அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம் ஆரம்பிக்கப்பட்டது.

2002 – தெற்கு செருமனியில் இரண்டு விமானங்கள் நடுவானில் மோதியதில் 71 பேர் உயிரிழந்தனர்.

2004 – காசினி-ஹியூஜென்சு  விண்கலம் சனிக் கோளின் சுற்று வட்டத்திற்குள் சென்றது.

2007 – இங்கிலாந்தில் மூடிய பொது இடங்களில் புகைத்தல் தடை செய்யப்பட்டது.

2013 – குரோவாசியா ஐரோப்பிய ஒன்றியத்தில் 28-வது உறுப்பு நாடாக இணைந்தது.

2013 – நெப்டியூனின் எஸ்/2004 என் 1  நிலவு கண்டுபிடிக்கப்பட்டது.

2016 – லாத்வியா பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பில் 35-வது உறுப்பு நாடாக இணைந்தது.

பிறப்புகள்

1864 – வலையட்டூர் வெங்கையா, இந்தியக் கல்வெட்டாய்வாளர், வரலாற்றாளர் (இ. 1912)

1906 – புலவர் குழந்தை, தமிழகத் தமிழறிஞர், புலவர் (இ. 1972)

1913 – பி. பி. குமாரமங்கலம், இந்திய இராணுவத்தின் 7வது தலைமைப் படைத் தலைவர் (இ. 2000)

1925 – கொண்டல் சு. மகாதேவன், தமிழக எழுத்தாளர்.

1927 – சந்திரசேகர், இந்தியாவின் 11வது பிரதமர் (இ. 2007)

1934 – தாமரைக்கண்ணன், தமிழக எழுத்தாளர், கல்வெட்டு ஆய்வாளர் (இ. 2011)

1935 – ஞானி, தமிழக எழுத்தாளர்

1935 – டி. ஜி. எஸ். தினகரன், இந்திய கிறித்தவ மறைபரப்புனர் (இ. 2008)

1938 – துரைமுருகன், தமிழக அரசியல்வாதி, வழக்கறிஞர்

1939 – வே. ச. திருமாவளவன், தமிழக எழுத்தாளர்

1949 – வெங்கையா நாயுடு, இந்திய அரசியல்வாதி

1950 – கணேசு தேவி, இந்திய மொழியியலாளர்

1961 – கல்பனா சாவ்லா, விண்வெளி வீராங்கனை (இ. 2003)

இறப்புகள்

1962 – புருசோத்தம் தாசு தாண்டன், இந்திய அரசியல்வாதி (பி. 1882)

1978 – வெ. சாமிநாத சர்மா, தமிழகத் தமிழறிஞர், பன்மொழி அறிஞர் (பி. 1895)

1991 – கா. கோவிந்தன், தமிழக அரசியல்வாதி, எழுத்தாளர் (பி. 1915)

சிறப்பு நாள்

மருத்துவர்கள் நாள் - இந்தியா

படைத்துறையினரின் நாள் - சிங்கப்பூர்

கனடா நாள்

குழந்தைகள் நாள் - பாக்கித்தான்

அடிமை ஒழிப்பு நாள் - நெதர்லாந்து அண்டிலிசு, சுரிநாம்

பொறியாளர் நாள் - பகுரைன், மெக்சிக்கோ

விடுதலை நாள் - ருவாண்டா, சோமாலியா

குடியரசு நாள் - கானா

செவ்வாய், 4 ஏப்ரல், 2023

என்னது சாமந்திப் பூவை சாபிடலாமா???

சாமந்திப் பூவில் ஏராளமான மருத்துவக் குணங்கள் உள்ளன என்பது உங்களுக்கு தெரியுமா???

சாமந்தி பூ எளிதில் கிடைக்ககூடிய ஒன்று...


  • நன்றாக காய வைத்த  சாமந்திப் பூவை எடுத்து கொள்ள வேண்டும். பின்னர் அதில் ஒரு டம்ளர் வெந்நீர் சேர்த்து கலக்கினால் சாமந்திப் பூ தேநீர் தயார். இதை குடித்தால் உடலுக்கு தேவையான விட்டமின் சி சத்து அதிகமான  அளவில் கிடைக்கும் என கூறப்படுகிறது.
  • சாமந்திப் பூவின் இதழ்களை தண்ணீரில் கொதிக்க வைத்து கசாயம் செய்து அதனுடன் பனை வெல்லம் கலந்து அருந்தினால் மலச்சிக்கல் தீரும்.
  • தலைவலி நீங்க செவ்வந்திப் பூவின் இதழ்களை நிழலில் உலர்த்தி பொடி செய்து தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் தலைவலி நீங்கும்.
  • உடல் பலம் பெறு சாமந்திப் பூவின் இதழ்களை காயவைத்து பொடி செய்து தேன் கலந்து சாப்பிடலா ம் . அடிக்கடி சோர்வு ஏற்படாமலும் தடுக்கும்.
  • சாமந்திப் பூவின் இதழ்களை நீரில் கொதிக்கவைத்து அந்த நீரை சுளுக்கு வீக்கம் உள்ள பகுதிகளில் ஒற்றடம் கொடுத்து வந்தால் சுளுக்கு வீக்கம் விரைவில்  குறையும்.

திங்கள், 3 ஏப்ரல், 2023

தன்நிலை கர்வம்

ஒரு நரி அதிகாலை எழுந்து மேற்கு நோக்கி வேட்டைக்குப் புறப்பட்டது. கிழக்கே இருந்து எழுந்த சூரிய ஒளியில் அதன் நிழல் வெகு நீளமாய் வெகு பிரமாண்டமாய்த் தெரிந்தது.
நரிக்கு ஏக குஷி…

“நான் ரொம்பப் பெரிய ஆளாக்கும். இவ்வளவு பெரிய எனக்குப் பசி தீர வேண்டும் என்றால் குறைந்தபட்சம் ஒரு யானை அல்லது ஒட்டகமாவது கிடைத்தால் தான் கட்டுபடியாகும்!’ என்று ஊளையிட்டது.

கொஞ்சம் சின்ன விலங்குகளை ஏளனத்துடன் அலட்சியப் படுத்தியபடி தன் பசிக்குக் குறைந்தபட்சம் ஒரு யானை, யானை என்றபடி காடு முழுவதும் ஓடிக் கொண்டே இருந்தது. தேடிக் கொண்டே இருந்தது; பாவம், ஒன்றும் கிடைக்கவில்லை.

மதியம் தலைக்கு மேலே உச்சியில் சூரியன் வந்தபோது நரியின் நிழல் சிறுத்து அதன் காலடியில் விழுந்திருந்தது.”ஆஹா… பசியால் நாம் எவ்வளவு இளைத்துப் போய்விட்டோம்…’ சிறுத்து விட்டோம் என்று வருந்தியது நரி.

”ஆஹா.. இந்த அளவுக்கு இளைத்து விட்டோம்.  ஒரு ஆட்டுக் குட்டியோ, கோழியோ கிடைத்தால் கூட போதுமானது என்று தேடியது. ம்ஹூம்,
பயனில்லை. மாலையில் மேற்கே வந்த சூரியனால் நரியின் நிழல் நரிக்குப் பின்பாக விழுந்தது… 

அதனால், நரிக்குத் தன் நிழலே  தெரிய வில்லை…
”ஆஹா.. நாம் வெகுவாக இளைத்து விட்டோம்.
நாம் இல்லவே இல்லை போலிருக்கிறது… ஒரு வேளை இறந்து போய் விட்டோமோ?’ என்று பயந்தது.

பிறகு, “சீச்சி… நாம் உயிரோடு தான் இருக்கிறோம். இந்தப் பசிக்கு ஒரு கோழிக்குஞ்சு, ஏன், ஓர் எறும்பு கிடைத்தால் கூட போதும்..”‘ என்று நாக்கைத் தொங்க விட்டபடி தள்ளாடி, தள்ளாடி நடந்தது.

இந்த நரியின் கற்பனை மாதிரி தான்… சிலர் தங்களை வெகு பிரமாதமாக எண்ணிக் கொண்டு தங்கள் திருப்திக்கு எதை, எதையோ
தேடுகின்றனர். கிடைத்த பல பரிசுகளை ஒதுக்கி விட்டு அலைகின்றனர். முடிவில் ஏதாவது கிடைக்காதா என்று ஏங்கி வாடுகின்றனர்.

காலை நரிபோல் கர்வத்தோடு தேடவும் வேண்டாம்;

மாலை நரிபோல் கவலையோடு வாடவும் வேண்டாம்.

இயல்பாக இருப்போம்.  கர்வத்தை தவிர்ப்போம். வாழ்வைக் கொண்டாடுவோம்.


படித்ததில் ரசித்தது....

நம் எண்ணம் தான் நமக்குச் சிறை

ஒரு பிச்சைக்காரன் ஒரு தகரப்பெட்டியின் மேல் அமர்ந்து கொண்டு வெகு நாளாக பிச்சை எடுக்கிறான். ஒரு நாள் அவன் இறந்து விடுகிறான்.  அப்போது மக்கள் நல மேம்பாட்டு துறையினர் வந்து அவனை தூக்கி செல்லும் போது, அவன் அமர்ந்திருந்த பெட்டியை திறந்து பார்கிறார்கள். அதில் விலை உயர்ந்த ஆபரணங்கள் இருப்பதைக் கண்டு வியந்து போனார்கள்.  இது தெரியாமல் அவன் வாழ்க்கை முழுவதும் பிச்சை எடுத்தான். 

இது தான் தொழிலில் சிறை.... 

இன்னொரு மனிதர் நிறைய பணம் சேர்த்து, தன் வீட்டுக்கு கீழ் பாதாளம் அமைத்து, அதில் சேர்த்து வைத்திருந்தார். ஆனால் , அவர் ஒரு நாள் கூட அதை சரி பார்த்ததே இல்லை
. 0
இதை எப்படியோ தெரிந்து கொண்ட நபர் ஒருவர் 

அந்த அறையின் அடுத்தப் பக்க சுவரை துளையிட்டு அனைத்து பணத்தையும் எடுத்து செல்கிறார்.

அது இவருக்கு தெரியாமலேயே பணம் பத்திராமாக இருப்பதாக எண்ணி மகிழ்ச்சியாக இருக்கிறார்.  

இது தான் மனித மனம் 

ஒருவன் இருக்கிறது என்பது தெரியாமல் பிச்சை எடுக்கிறான்.

மற்றொருவன் இல்லாததை இருப்பதாக எண்ணி திருப்தி கொள்கிறான்.

இதுவே சிறை கொண்ட மனித மனதின் மாய விளையாட்டு.......!!!





படித்ததில் ரசித்தது.......

ஞாயிறு, 2 ஏப்ரல், 2023

ஐஸ் குச்சி டேபிள் விளக்கு

ஹலோ குட் மார்னிங் நண்பர்களே....... இன்று ஞாயிற்றுக்கிழமை காலை எழுவதற்கு  மிகவும் தாமதமாகி விட்டது.

அதற்கு  என்ன காரணம் என்றால் நேற்று இரவு எங்கள் கோனி குட்டி வந்திருந்தான். 

அவனுடன் விளையாடிவிட்டு தூங்குவதற்கு வெகு நேரம் ஆகிவிட்டது.

சென்ற வாரம் விடுகதைக்கான விடை இதோ👇🏻


விடை: 1,2,4,8,16


இன்றைய பதிவில் நாம் என்ன செய்யப் போகிறோம் என்றால் ஐஸ் குச்சிகளை வைத்து ஒரு அழகான மேஜை விளக்கு செய்யப் போகிறோம்.
 
அதை எப்படி செய்வது என்று இப்போது பார்க்கலாமா?

இதற்கு இரண்டே பொருட்கள் இருந்தால் மட்டும் போதும், அழகான விளக்கை தயார் செய்யலாம். 

இதற்கு ஒரு ஐந்து கட்டுகள் ஐஸ் குச்சிகள் மற்றும் பசை இருந்தால் போதும்.


நான்கு குச்சிகளை சதுரமாக ஒட்டிக் கொள்ளவும். இப்படி அனைத்து குச்சிகளையும் சதுரங்களாக ஒட்டி காய வைத்துக் கொள்ளவும்..


இந்தக் குச்சிகளை எல்லாம் நன்றாக காய்ந்தவுடன் இப்பொழுது விளக்கு தயார் செய்யலாம். சதுரங்களாக ஒட்டிய குச்சிகளை ஒன்றின் மீது ஒன்றாக பசை பூசி ஒட்டிக் கொள்ளவும்


இப்பொழுது ஒரு அழகிய கோபுரம் போல் நமது ஐஸ் குச்சிகள் அடுக்குகளாக இருக்கும். இந்த ஐஸ் குச்சி கோபுரத்தினுள் விளக்கை பொருத்திக் கொள்ளவும். நான் இதில் எல் இ டி விளக்கை பொருத்தி உள்ளேன்.


 இப்பொழுது பார்த்தீர்களா நமது விளக்கு எவ்வளவு அழகாக இருக்கிறது. 

இந்த பதிவு உங்களுக்கும் பயனுள்ளதாக அமைந்திருக்கும் என்று நம்புகிறேன் மீண்டும் அடுத்த பதிவில் சந்திக்கிறேன் அதுவரை தமிழ் போல் வளர்வோம்.






சனி, 1 ஏப்ரல், 2023

வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன

திருச்சபையால் நடத்தப்படுகின்ற சர்ச் ஒன்றில் திடீரென்று ஒரு சுற்றறிக்கை கட்டுப்பாடு. குறைந்தபட்சம் 10ஆம் வகுப்பு படித்திருந்தால் மட்டுமே வேலை. மற்ற அனைவரையும் வெளியே அனுப்புங்கள் என்று.

மழைக்குக் கூட பள்ளிக்கு போகாமல் சர்ச்சில் மணி அடிக்கும் வேலையை பார்த்து குறைந்த ஊதியத்தில் குடும்பம் நடத்திய பீட்டருக்கு வேலை போய் விட்டது.

ஆனால் பாசமாக பழகிய சர்ச் பாதர் ஒன்றும் செய்ய இயல வில்லை .ஆனால் பரிதாபப்பட்டு சற்று பணம் கொடுத்து வேறு ஏதேனும் வேலை பார்த்துக்கொள்! என்று அனுப்பிவிட்டார்.

என்ன செய்வதென தெரியாத பீட்டர் தினமும் சர்ச்சுக்கு வந்து பிரேயர் செய்து விட்டு வாசலில் நின்று சர்ச்சையே வெறிக்க பார்த்துக் கொண்டிருந்தார்.

அப்போது அந்த வழியாக வலமும் ,இடமுமாக செல்பவர்கள் இங்கே சுருட்டு கிடைக்குமா ?இல்லையெனில் எங்கே கிடைக்கும் ?என்று விசாரிக்க ஆரம்பித்தார்கள்.

பீட்டர் அருகில் இருக்கும் கடைகளை சொல்ல ஆரம்பித்தார் .ஒரு வாரம் கழிந்தது திடீரென ஒரு ஞாபகம் வந்து கையில் இருக்கும் பணத்திற்கு சுமார் பத்து கட்டு சுருட்டு வாங்கி ஒரு தட்டில் வைத்து விற்க ஆரம்பித்தார்.

விற்பனை கூடியது. ஒரு சிறிய பெட்டிக் கடையில் வைத்து விற்க ஆரம்பித்தார் .அதிலும் சற்று வருமானம் கூடியது .

டவுனில் சுருட்டு மட்டுமல்லாமல் அனைத்து பொருட்களுக்கும் விற்கும் ஒரு கடையை ஆரம்பித்தார் .அதில் வருமானம் கூடியது.

ஒரு சுருட்டு கம்பெனி சொந்தமாக வைத்தார் .அதில் வருமானம் பல மடங்கு கூடி லட்சங்கள் கோடிகளில் வியாபாரம் வரவு செலவுகள் அதிகரித்தன.

ஆனாலும் இன்றளவும் பீட்டர் கைநாட்டு மட்டுமே .ஒருநாள் அவரைப் பார்க்க வங்கி மேலாளர் வந்திருந்தார். வரவு செலவுகளைப் பற்றி பேச ஆரம்பித்து விட்டு பின்னர் என்ன படித்திருக்கிறீர்கள் ?என்று கேட்டார்.

மழைக்கு கூட பள்ளிக்கு செல்லவில்லை, என்று பீட்டர் சொன்னதும் ,பள்ளிக்கு செல்லாமலேயே நீங்கள் லட்சம், கோடியாக சம்பாதித்து இருக்கிறீர்கள். நீங்கள் மட்டும் குறைந்தபட்சம் 10 படித்திருந்தால் உலகையே விலைக்கு வாங்கி இருப்பீர்கள் என்று சொன்னதும்,பீட்டர் அமைதியாகச் சொன்னார்.

இல்லை ,அப்படியெல்லாமில்லை .உள்ளூர் சர்ச்சில் மணி அடித்து கொண்டிருப்பேன் என்றார். மேலாளர் மயங்கி விழுந்தார்.

வாசலில் நிற்க கிடைத்த இடத்தையும்,கையில் கிடைத்த சொற்ப பணத்தையும் நல்வாய்ப்பாக பயன்படுத்தியது சரிதானா ?இல்லையா ?




படித்ததில் ரசித்தது......

முகபத் கா சர்பத்.

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.....
ஏப்ரல் மாதத்தின் முதல் நாளான இன்று ஒரு குளுமையான பானம் செய்யலாம் என்று இருக்கிறேன். ஆமாம் ஏப்ரல் மாதம் வரும் போது கூடவே கோடைகலத்தையும் அழைத்து வருகிறதல்லவா? அது மட்டுமா? கோடையின் வெப்பத்தை தணிக்க தர்பூசணி பழங்களையும் அல்லவா கொண்டு வருகின்றது.

இன்று நான் இந்த தர்பூசணி பழங்களை வைத்து தான் ஒரு அருமையான பானம் தயாரிக்கப் போகிறேன். அதை எப்படி செய்வது என்று இப்பதிவில் பார்க்கலாம் வாருங்கள்.

சொல்ல மறந்து விட்டேன் அந்த பானத்தின் பெயரை தெரிஞ்சுக்க வேண்டாமா?

அந்த பானத்தின் பெயர் முகபத் கா சர்பத்.... சரி வாங்க....  இதை எப்படி செய்யலாம்னு இப்பொழுது பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:
தர்பூசணி பழம் -1
பால்  -1 கோப்பை
சர்க்கரை - 3 தேக்கரண்டி
ரோஸ் சிரப் - 1 தேக்கரண்டி

செய்முறை :

முதலில் தர்பூசணி பழத்தை விதைகள் நீக்கி சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.அதன் பின்னர் விதை நீக்கிய பழத் துண்டுகளை ஒரு பாத்திரத்தில் சேர்க்கவும். அதனுடன் ஒரு கோப்பை பால் இரண்டு அல்லது மூன்று தேக்கரண்டி சர்க்கரை சேர்க்கவும். கூடவே ஒரு தேக்கரண்டி ரோஸ் சிரப்பையும் சேர்த்து நன்றாக கலக்கவும் குளு குளு முகபத் கா சர்பத் தயார்.
 
ஐஸ் கட்டிகளை சேர்த்து ஜில்லென்று  பரிமாறவும். இந்தக் கோடையில் நீங்களும் இதை தயார் செய்து உங்கள் குடும்பத்துடன் பருகி மகிழுங்கள். மீண்டும் அடுத்த பதிவில் சந்திக்கிறேன்.

 




Figurative Painting

 Heloo friends welcome to my blog. Herafter i would lke to share my creative work in this blog. so i request everyone to check out my work a...