ஈஸ்டர் தினத்தில் தினத் தந்தி "குடும்பமலர்" வெளியான எனது கதை. வெளியிட்ட ஆசிரியருக்கு நெஞ்சார்ந்த நன்றி
சிறுகதை
எழுதியவர் பிரபாவதி.கோ
"என்னங்க நீங்க அப்பா ஆகா போறீங்க " என்று சுமதி சொன்ன அடுத்த நொடி அவன் சந்தோஷத்தில் மிதந்தான்.
அவன் பெற்றோரின் இறப்புக்கு பின் சொந்தங்கள் எல்லாம் அன்னியமாகி போக இவன் அனாதையாகி போனான். இருப்பினும் கவலை படாமல் சின்ன சின்ன வேலைகள் செய்து தன் படிப்பை தொடர்ந்தான்.
நல்ல கல்லூரியில் சேர்ந்து நன்றாக படித்து கம்புஸ் இண்டர்வியூவில் நல்ல வேலையும் கிடைத்தது.
இவனை விட்டு ஓடிய சொந்தங்கள் எல்லாம் நான் பெண் தரேன் நான் பெண் தரேன் என்று போட்டி போட்டுக் கொண்டு வந்தன அனால் அவனோ ஒரு அனாதை பெண்ணை மணந்தான்.
ஒட்டிக் கொள்ள வந்த சொந்தம் மீண்டும் விட்டுச் சென்றது.
எனவே அவனுக்கு என்று இருக்கும் ஒரே சொந்தம் அவன் மனைவி சுமதி மட்டும் தான்.அவள் தாயாக போகும் தருணத்தில் அவளை சந்தோசமாக பார்த்து கொள்ள வேண்டும் என்று நினைத்தான்.அவன் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை அவளை ஒரு சின்ன வேலை கூட செய்ய விடாமல் ஒரு தேவதையை போல் பார்த்துக் கொண்டான். ஆனாலும் அவள் முகத்தில் ஏதோ ஒரு வாட்டம். அவள் தாயாக போகிறாள் என்கிற சந்தோஷம் அவள் முகத்தில் கொஞ்சம் கூட தெரிய வில்லை அதை உணர்ந்த அவன் என்னமோ ஏதோ என்று பதறிப்போய் "என்னம்மா? உடம்புக்கு முடியலையா?ஏன் ஒரு மாதிரி இருக்கே?" என்றான்.
ஒன்றுமில்லை என்று மழுப்பினாள்.
இந்த நேரத்தில் அம்மா இருந்தால் எவ்வளவு ஆதரவாக இருக்கும். தாயாக போற பெண்ணை ஒரு தாயை தவிர வேறு யாரு புரிஞ்சிக்க முடியும். வாயிக்கு ருசியா ஆசையா சமைச்சி வேண்டாம் என்றாலும் அன்பாய் ஊட்டிவிடும் அன்னைக்கு நிகர் வேறு யாரு. எந்த ஜென்மத்தில் செய்த பாவமோ இப்படி அனாதையா வாழ வேண்டி இருக்கு என்று தன்னை நொந்துக் கொண்டாள் .
"என்னடா உனக்கு அம்மா இல்லையேனு கவலை படுறியா? என்று எதேச்சையாக கேட்டான்.
உடனே அவள் கண்களில் அருவியாய் கொட்டியது கண்ணீர்.
"ஹேய், என்ன ஆச்சு மா?ஏன் அழறே?"என்று அவள் தோலை பற்றி அன்பாய் கேட்டான்.
அவள் மேலும் குலுங்கி குலுங்கி அழுதாள். பின் சுதாரித்துக் கொண்டு சொன்னால் "இந்த மாதிரி சமயத்தில் அம்மா இருந்த நல்ல இருக்கும்னு தோணுது."
அவள் வருத்தத்திற்கு காரணம் தெரிந்த சந்தோசத்தில் "அட பைத்தியமே இதுக்கா ஒரு வராம இப்படி மூஞ்சிய தூக்கி வெச்சிகிட்டு இருக்கே?" என்றான்.
அவள் ஆச்சரியத்துடன் அவனையே பார்த்தாள்.
"நாளைக்கு உனக்கு பிறந்த நாள். சோ உனக்கு பிடிச்ச பிறந்த நாள் பரிசு தரேன்."
அவள் கண்ணகளை செல்லமாக கில்லி என்றான்.
மேலும் அவனே தொடர்ந்தான் "சாயங்காலம் சீக்கிரம் வரேன் ரெடியா இரு ஷாப்பிங் போகலாம்." என்று சொல்லிவிட்டு சென்றவனையே பார்த்தபடி நின்றிருந்தாள்.
அன்று மாலை ஷாப்பிங் முடித்து அப்படியே வெளியே ஹோட்டல்ல சாப்பிட்டு வீட்டிற்கு வந்தனர்.
மறுநாள் காலையில் காபி கப்புடன் வந்து அவள் கணவன் "பிறந்த நாள் வாழ்த்துக்கள் டியர்"என்று செல்லமாக அவள் நெற்றியில் முத்தமிட்டு அவளை எழுப்பினான்.
"ம்ம்ம் தேங்கிஸ் "என்றாள் தூக்க கலக்கத்துடன்.
அவள் காபி குடித்ததும் "சரி வா உனக்கு ஒரு பரிசு வாங்கி வந்திருக்கேன். பிடிச்சிருக்கானு வந்து பார்த்து சொல்லு என்றான்.
என்ன என்பதை போல் இமைகளை உயர்த்தினாள்.
"வந்து பாரு" என்று அவள் கையை பிடித்துக் இழுத்துக் கொண்டு ஹாலுக்கு வந்தான். அங்கே பாதி நரைத்த முடியுடன் மூக்கு கண்ணாடி அணிந்த ஒரு பெண் சோபாவில் உட்கார்ந்திருந்தார்கள்.
அவள் தயக்கத்துடன் யாரு என்று அவர் அருகில் வந்து பார்த்தாள்
.
"பிறந்த நாள் வாழ்த்துக்கள் சுமதி செல்லம்" என்று பரிசை கொடுத்தார்.
"அம்மா" என்று அவர்களை கட்டிக் கொண்ட சுமதி கண்களில் பெருகியது கண்ணீர் இப்பொழுது அந்த பெண்ணின் கண்களிலும் கண்ணீர்.
"ஏன் அழுறிங்க அம்மா" என்று பதறினாள்.
அனாதையை முதியோர் இல்லத்தில் வாடிக் கொண்டிருந்த எனக்கு இப்படி ஒரு அன்பான மகளும் மருமகனும் கிடைச்சத நினைச்சி ஆனந்த கண்ணீர் என்றார்கள்..
தன் கணவனை பெருமையோடு பார்த்தாள் அவள்....
---------------------------------------------முற்றும் -------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக